நம்முடைய தெய்வம்
உலகத்தில், வணங்கக் கூடிய முதல் தெய்வம் தாய். இந்த உலகத்துக்கு நம்மை அறிமுகப்படுத்திய முதல் உயிர் அவர் தான் என்று, இக்காலத்தில், பலருக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. நம்மை வளர்த்து ஆளாக்கிய விதத்தை, நவீன காலத்தில் பலர் மறந்து போகின்றனர். கண்டிக்கும் அப்பாவை பலருக்கு பிடிக்காது. ஆனால், உங்களின் எதிர்காலத்துக்கு ஏற்ற வழியை தேர்ந்தெடுப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் முன்னோடியாக இருக்கக் கூடிய ஜீவனும் அவர் தான்.திருமணத்துக்கு முன்போ, பின்போ, பெற்றோருக்கான கவனிப்பு, பல வீடுகளில் இல்லாமல் போகிறது என்பது, எவ்வளவு பெரிய கொடுமை. நமக்காக, உழைத்து, களைத்தவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்ற எண்ணம் இருந்திருந்தால், புற்றீசல் போல் பெருகி வரும் முதியோர் இல்லங்களை கட்டுப்படுத்தியிருக்கலாம். அதற்காக, எல்லோர் மீதும் குற்றச்சாட்டு வீசப்படுகிறது என்று எண்ண வேண்டாம். பெற்றோருக்காக, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களால் தான், இந்த உலகம் இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கிறது. நீண்டகாலம் சுற்ற வேண்டும் என்றால், பெற்றோர் நலன் முக்கியம்.மனம் விட்டு பேசுங்கள்பெற்றோரை விட்டு இடம் பெயர்ந்து, வெகு தொலைவில் பணிபுரிந்து கொண்டிருந்தால், தினமும் ஒரு நேரமாவது அவர்களுடன் பேசுங்கள். வருவாயில், அவர்களுக்கு தேவைப்படும் தொகையை மாதந்தோறும் கொடுக்க மறக்க வேண்டாம். அவர்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லாதது போல் காண்பித்து விட வேண்டாம். சொற்ப நேரமாவது, உடல் நலம் எப்படி இருக்கிறது; உணவு எடுத்துக் கொண்டீர்களா? என்று கேட்டாலும் கூட, அவர்களின் மனம் குளிரும். மாதத்தில், இரண்டு, மூன்று நாட்களாவது அவர்களோடு இருக்கும் வகையில், விடுமுறையை திட்டமிட வேண்டும். அவர்களின் மனம் வருந்தும்படி, எக்காரியத்தையும் செய்து விட வேண்டாம்.மருத்துவ சிகிச்சைநீங்கள் இருக்கும் இடத்துக்கு, அவர்களை வரவழைத்து உபசரிக்கலாம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அவர்களை, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது. ஏதாவது உபாதைகள் இருந்தால், நம்மிடம் தெரிவிக்க அவர்கள் தயங்குவர். இதை கண்டறிந்து, தேவையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம்.சுப நிகழ்ச்சிகளுக்கு, பெற்றோரையும் கண்டிப்பாக அழைத்து செல்ல வேண்டும். நம்முடைய குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்கிறோமோ, அவர்களையும், அதே போல் பாவித்து, தேவையான பணிவிடைகளை செய்ய வேண்டும். ஏனென்றால், இரண்டாவது குழந்தைப் பருவத்தில் வசிக்கிறார்கள் அவர்கள்; நம்முடைய துணை கட்டாயம் தேவை. இன்று, பெற்றோரை நாம் பார்த்துக் கொண்டால், நாளை, நம் குழந்தைகளும் நம்மை பார்த்துக் கொள்வர் என்பதை மறக்க வேண்டாம்.விரும்பும் உயரம்பெற்றோரை மறந்து விடும் பலர், ஒரே ஒருமுறை முதியோர் இல்லத்துக்கு சென்று வாருங்கள். அவர்களின் தனிமை, குடும்ப உறவுகளின் வரவுக்காக ஏக்கம், மனதில் குவிந்திருக்கும் சோகங்களை சொல்லக் கேட்கும் போது, பெற்றோரை தவிர, வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று நிச்சயமாக தோன்றும்.எத்தகைய உயரத்துக்கு சென்றாலும், தயவு செய்து பெற்றோரை மட்டும் மறந்து விட வேண்டாம். நீங்கள் உயரத்துக்கு போகும் போது, உங்களை விட, அவர்கள் தான் அதிகமாக கொண்டாடுவார்கள். இருக்கும் போது புறந்தள்ளி விட்டு, இல்லாத போது, நினைத்து ஏங்குவதில் எந்தவொரு பயனும் இல்லை.