கேள்வி - பதில்
சாதாரணமாகவே எனக்கு அதிகம் வியர்க்கும். அதிலும் கோடைகாலம் என்றால், கேட்கவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக வியர்க்கும்போது, உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள், வியர்வையுடன் சேர்ந்து வெளியேறிவிடும். அதனால், இதய பாதிப்புக்கூட வரலாம் என்கின்றனர். உண்மையா டாக்டர்?எஸ்.காதர் மொய்தீன், திருவள்ளூர்.உஷ்ணம் அதிகமாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, அதை சமன் செய்வதற்காக, உடல் அதிக அளவு வியர்க்கும். இதனால் நீர்ச்சத்து வெளியேறும்போது, அத்துடன் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும் வெளியேறும். இதனால், இதயத்திற்கு பாதிப்பு என்று சொல்ல முடியாது. ஆனால், அதிகப்படியான உஷ்ணத்தை ஈடுசெய்ய, இதயம் அதிக அளவில் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த நிலையில், ரத்த நாளங்கள் அதிகப்படியாக சுருங்கி விரிவதால், இதயத்தின் பணி கூடுகிறது. தொடர்ந்து இதுபோன்று இருந்தால், இதய பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஹைப்போடென்ஷன் எனப்படும் ரத்த அழுத்தம் குறையலாம். நீர்ச்சத்து குறைவதால், டிஹைட்ரேஷன், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.காலை 11:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, வெயிலில் போகாமல் இருப்பது நல்லது. தவிர்க்க முடியாது என்றால், குறிப்பிட்ட இடைவெளியில் போதுமான அளவு திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கமாக குடிக்கும் தண்ணீரைவிட, கோடையில் கூடுதலாக நீர் குடிப்பது நல்லது. ஒரே நேரத்தில் 3, 4 டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, பிறகு தண்ணீரே குடிக்காமல் இருப்பதைத் தவிர்த்து, குறிப்பிட்ட இடைவெளியில், சீராக திரவ உணவு எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.டாக்டர் பாரத், பொதுநல மருத்துவர், ஹை கிரவுண்டு அரசு பொது மருத்துவமனை பாளையங்கோட்டை.என் வயது 25. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன். கடந்த 2, 3 வாரங்களாக, எனக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு, சிறுநீர்க் கடுப்பு ஏற்படுகிறது. திடீரென்று இந்த பிரச்னை அடிக்கடி வருவதால், சிறுநீரகக் கோளாறு இருக்கும் என்கின்றனர் என் நண்பர்கள். அப்படி இருக்க வாய்ப்புண்டா?ஹரிஹரன், கோவை.வெயில் அதிகரிக்கும் காலத்தில், வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, டைபாய்டு, சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெயில் காலத்தில், உடலின் நீரானது, வியர்வை மூலம் அதிகம் வெளியேறும். இதனால் சிறுநீர் கழிப்பது குறையும். சிறுநீர் பாதையில் பாக்டீரியாக்கள் அதிக அளவில் காணப்படும். அதிக அளவு நீர் குடித்து, அடிக்கடி சிறுநீர் வெளியறும்போது, இந்த பாக்டீரியாக்களும் வெளியேறிவிடும். சிறுநீர் கழிப்பது குறையும்போது, பாக்டீரியாக்கள் வெளியேறாமல் நோய் தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இதுதவிர, போதுமான அளவு சிறுநீர் வெளியேறாமல் இருந்தால், கால்சியம் படிந்து சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில், நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களை சாப்பிடுங்கள். மார்க்கெட்டிங் போன்ற பணிகளை செய்பவர்கள், மறக்காமல் சுத்தமான குடிநீரை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும். தெருவோரக் கடைகளில், பழச்சாறு, சிற்றுண்டிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதையும் மீறி உங்களின் பிரச்னை தொடர்ந்து இருந்தால், டாக்டரின் ஆலோசனையை பெறுவது நல்லது.டாக்டர் ரகுநாதன்பொது மருத்துவர், சென்னை மருத்துவக் கல்லூரி.