கேள்வி - பதில்
எனக்கு, மாதவிடாய் 1984ல் நின்று விட்டது. என் வயது 68. எனக்கு தற்போது மார்பகங்களில் இருந்து பால் சுரக்கிறது. இடுப்பு வலிக்கு 10 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிடுகிறேன். கழுத்து வலி, வயிற்று வலி வருவதால், அதற்கும் மாத்திரை சாப்பிடுகிறேன். பால் சுரப்பதால், என் உடல் நலத்தில் ஏதாவது கோளாறு உள்ளதா? ஆலோசனை தேவை.எம்.மீனாட்சி, அன்பு நகர், மதுரை 14மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பிறகு, ரத்தப் போக்கு இருக்கக் கூடாது. அதேபோல மார்பகங்களில் இருந்து பால் வடிவது, தண்ணீர் அல்லது வேறு நிறத்தில் திரவம் வடிவதும் கூடாது. இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை. மார்பகங்களில் சி.டி., அல்லது அல்ட்ரா சவுண்ட் என்று உங்கள் கோளாறுக்கு ஏற்ப, ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். உங்களுக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டதால், கட்டாயம் மேமோகிராம் பரிசோதனையும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் மார்பகங்களில் உள்ள திசுக்களில் கொழுப்பு குறைந்து, நார்ச்சத்து அதிகம் உள்ள பைப்ரோஸ் திசுக்கள் அதிகமாகிவிடும். இதனால்தான் மார்பகங்கள் சுருங்கி விடுகின்றன. இன்னொரு முக்கியமான விஷயம், மார்பகங்களில் கட்டி ஏதாவது இருக்கிறதா என்பதையும் பரிசோதித்து, இருந்தால் 'பயாப்சி' எடுத்து, கட்டியின் தன்மை எப்படி உள்ளது என்பதை தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும். 50 வயதிற்கு மேல், மார்பகங்களில் எந்தவிதமான மாற்றம் தெரிந்தாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.டாக்டர் சிவகாமி கோபிநாத்மகப்பேறு சிறப்பு மருத்துவர், சிம்ஸ், சென்னைஎன் வயது 64. நான் சிறு வயதிலிருந்தே யோகா செய்து வருகிறேன். இரண்டு மாதங்களாக யோகா செய்தால், நெஞ்சு வலி வருகிறது. இதனால், நான் தற்போது யோகா செய்வதை நிறுத்தி விட்டேன். ஏதாவது சிறு பாரம் துாக்கினாலும், நெஞ்சு வலிக்கிறது. என்ன காரணம்? சிகிச்சை செய்தபின் யோகாவைத் தொடரலாமா?ஏ.மணி, கோவை - 29உங்களுக்கு ரத்த அழுத்தம, கொழுப்பு உள்ளதா என்பதை மருத்துவப் பரிசோதனை செய்து, தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். சிறிய வயதிலிருந்தே முறையாக யோகா செய்பவர்களுக்கு, இதுபோன்ற பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. ஆசனம் பாதி, உணவு பாதி என்பதுதான் நியதி. நீங்கள் சரியான உணவு முறைகளை பின்பற்றினீர்களா என்பது தெரியவில்லை. 15 வயதில் இருப்பது போன்று, 30 வயதிலும் உடல் நிலை இருக்காது. ஆனால், நம்மில் பெரும்பாலும் 30 வயதிற்கு மேல்தான் கட்டுப்பாடில்லாமல், நினைத்ததை எல்லாம் சாப்பிடுகிறோம். எந்த ஆசனத்தைச் செய்யும் போதும், வலுக்கட்டாயமாக செய்யக் கூடாது. ரிலாக்ஸாக, நிதானமாகவே செய்ய வேண்டும்.ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், தேவையான சிகிச்சையை செய்த பிறகு யோகாவை தொடரலாம். இடையில் ஆறு மாதங்கள் யோகா செய்யாமல் விட்டுவிட்டு, அதன்பின் முதலில் செய்ததைப் போல எல்லா ஆசனங்களையும் செய்யக் கூடாது. காரணம் இடையில் சில காலம் யோகா செய்யாததால், தசைகள் இறுகியிருக்கும். அதனால் தசை தளர்வு ஆசனங்களை செய்த பிறகு, வழக்கமாகச் செய்யும் ஆசனங்களைச் செய்ய வேண்டும். உடல் பழைய நிலைக்கு வரும்வரை, ஒரு ஆசனத்தை ஒரு முறை செய்தால் போதும். ஆசன நிலையில் இருக்கும்போது, சுவாசம் சீராக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் யோகாவையோ வேறு எந்த உடற்பயிற்சியையோ செய்ய அவசியமில்லை.டாக்டர் லட்சுமி ஆண்டியப்பன், யோகா தெரபிஸ்ட்.