கேள்வி - பதில்
பருவமழைக் காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.ரா.காயத்ரி, பெங்களூரூ.மழைக்காலம் முடியும் வரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பதப்படுத்திய உணவைத் தவிர்க்க வேண்டும். காரணம், பதப்படுத்திய உணவில், நுண் கிருமிகள் அதிகம் உருவாகும் ஆபத்துள்ளது. அந்தந்த நேரத்திற்கான உணவை, அப்போதே சூடாக சமைத்து சாப்பிடுவதே நல்லது. ஒருமுறை சமைத்த உணவை, அடுத்த நான்கு மணி நேரத்திற்கு பயன்படுத்துவது இன்னும் நல்லது. குழந்தைகளைப் பொருத்தவரை, அவர்களுக்குத் தரும் உணவை வீட்டில் தயாரித்தே தர வேண்டும். நொறுக்குத் தீனிக்கு, புரதச்சத்து அதிகம் உள்ள சுண்டல் போன்றவற்றை கொடுக்கலாம். தினமும் ஒரு சுண்டல் என்றால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மழைக்காலத்தில், அனைத்து நோய்களும் தண்ணீர் மூலமாகவே பரவுகின்றன. குடிப்பது, சமையலுக்கு பயன்படுத்துவது உட்பட பயன்பாட்டிற்கான நீர் சுத்திகரிக்கப்பட்டதாகவே இருந்தாலும், அதையும் குறைந்தது, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஆற வைத்தே பயன்படுத்த வேண்டும். காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன், பழத்தை நன்கு கழுவி சாப்பிட வேண்டியது முக்கியம். மாதுளை, வாழைப்பழம் போன்ற தோலை உரித்து சாப்பிடும் பழங்கள் என்றால் பரவாயில்லை. மழைக்காலத்தில் மட்டும், ஆப்பிள் போன்ற தோலோடு சாப்பிடக் கூடிய பழங்களிலும், தோலை அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது. காரணம், தோலின் மேல் சில வகை கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு. தோலில் இருக்கும் நார்ச்சத்து கிடைக்காமல் போகலாம்; அது பரவாயில்லை. நார்ச்சத்து உள்ள மற்ற உணவுகளை சாப்பிட்டு சமன் செய்து கொள்ளலாம். கேரட், பீட்ரூட், ஆப்பிள், மாதுளை போன்ற அடர் நிறங்களைக் கொண்ட பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். சமையலில் மஞ்சள், சீரகம், சோம்பு, மிளகு, கசகசா, இஞ்சி, பூண்டு, வேப்பம்பூ போன்றவற்றை நிறையவே சேர்த்துக் கொள்ளலாம். இவை, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். தயிரில், செரிமானத்திற்கு உதவக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் (புரோ பாக்டீரியாக்கள்) அதிகம் உள்ளது. எனவே, தினமும் தயிர் சாப்பிடலாம். வீட்டிலேயே தினமும் புதிதாக தயாரித்த தயிர் என்றால் இன்னும் நல்லது. கிரீன் டீ, மூலிகை டீ போன்றவற்றையும் அவ்வப்போது குடிக்கலாம். தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று பார்த்தால், பச்சைக் கீரைகள் ஜீரணமாக அதிக நேரம் பிடிக்கும் என்பதாலும், மண் மற்றும் நுண் கிருமிகள் அதிகம் இருக்கும் என்பதாலும், முடிந்தளவு மழைக்காலத்தில் மட்டும் கீரையை தவிர்க்கலாம்.மழைக்காலம் என்றாலே எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, சமோசா போன்றவற்றை வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, மொறுமொறுவென்று சூடாக சாப்பிடப் பிடிக்கும்; ஆனால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உணவு தவிர, சில அடிப்படை விஷயத்திலும் கவனம் தேவை. குறிப்பாக, மழைக் காலத்தில் ரப்பர் செருப்புகளுக்கு பதில் லெதர் ஷுக்களையே அணிய வேண்டும். பூஞ்சைத் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதால், ஈரமான உடைகளை அணியக் கூடாது. பொதுவாகவே சமையலுக்கு, குடிப்பதற்கு கேனில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்துகிறோம். அதைக்காட்டிலும் போர்வெல் நீரை காய்ச்சி பயன்படுத்துவதே நல்லது. வீட்டு வைத்தியம்: வெதுவெதுப்பான நீரில் சில துளசி இலைகளைப் போட்டு பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன், அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து பருகினால், இருமல் தொண்டை கரகரப்பு சரியாகும். சுவாசப் பாதையில் பிரச்னை என்றால், வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் மஞ்சள், மிளகு சேத்துக் குடித்தால் சரியாகும்.உத்ரா ஷ்ரவண், ஊட்டச்சத்து நிபுணர்