பசியின்மை போக்கும் பிள்ளை வளர்த்தி
மருத்துவ குணங்கள் கொண்ட வசம்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்க வல்ல மாமருந்து. வசம்புக்கு, பிள்ளை வளர்த்தி என்ற பெயர் உண்டு; இது பசியின்மையை போக்க கூடியது. இதனால் பெரியவர்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.வசம்பை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து, குழந்தையின் நாவில் தடவும் வழக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி சரியாகும்; ஞாபக சக்தி கூடும். நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடிய வசம்பானது, வலியை போக்கவல்லது; பதட்டத்தை தணிக்க கூடியது. இதய ஓட்டத்தை, சீராக்க உதவும். சிறுநீரக கோளாறை போக்குவதோடு, ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது. வசம்பை பயன்படுத்தி இருமல், சளி, அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வசம்பு பொடி, அரை ஸ்பூன் அதிமதுர பொடி, ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தேனீராக பருகலாம். இது வாயு பிரச்னையை சரிசெய்யும். குடலில் உள்ள புண்களை ஆற்றும். இருமலை தணிக்கிறது. சளியை கரைக்க கூடியது. வயிற்றுப் போக்கு இருந்தால், பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன், அரை முதல் ஒரு கிராம் வரை வசம்பு பொடி, சம அளவு சுக்கு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டிய பின், காய்ச்சிய பாலில் சேர்க்கவும். இதை குடிப்பதன் மூலம், வாயு பிரச்னை சரியாகும். தகுந்த டாக்டரின் ஆலோசனையின்படி பயன்படுத்துவது நல்லது.