உள்ளூர் செய்திகள்

அத்தனை இருமலுக்கும் சித்த மருத்துவம் தீர்வு

இருமலில் பல்வேறு வகைகள் உண்டு. இதில், கபம் கலந்த இருமல்தான் பாடாய்படுத்தும். கற்பூரவள்ளி இலையின் சாறை, சிறிது சர்க்கரையில் கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நிற்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை பொடி செய்து, தேனில் கலந்து கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்லை அளிக்கும் போது, 10 கிராம் சிற்றரத்தையை உடைத்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு தம்ளர் நீர் விட்டு, பாதியாக சுண்டுமளவுக்கு கஷாயமாக்க வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து, உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும். நன்றாக காய்ச்சிய பசும்பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன், சிறிது மிளகுத்தூளையும் சேர்த்து கலந்து குடிக்க, இருமல் தணியும். இரைப்பு இருமலுக்கு இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, இவற்றை சமஅளவு எடுத்து, வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், இரைப்பு இருமல் குணமாகும். கோழை இருமலுக்கு, நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால், இருமல் போன்ற குறைகள் அகலும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல புத்துணர்வு பெறும். வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், சிறிது பசும்பாலுடன், அரைத் தேக்கரண்டி மிளகை உடைத்துப் போட்டு, கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்ட வேண்டும். அதில் சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கி, படுக்க முன் குடித்து விட வேண்டும். இது போல மூன்று நாட்கள் சாப்பிட்டால், வறட்டு இருமல் குணமாகும். உடல் சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு, மிளகுத்தூளையும், பனை வெல்லத்தையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொண்டு, ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும். எந்த வகை இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். பத்து கிராம் சீரகத்தை லேசாக வறுத்து எடுத்து, அம்மியில் வைத்து தூள் செய்து, அதன் சம அளவு கற்கண்டைத் தூள் செய்து, அத்துடன் கலக்க வேண்டும். ஒரு சீசாவில் வைத்துக் கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டி சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், ஐந்தே நாளில் இருமல் குணமாகும். ஜலதோஷம் காரணமாக இருமல் இருந்தால், ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து, காய விட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் இரண்டு தம்ளர் தண்ணீரை விட்டு, மூடி நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி, அதில் பாதியை மட்டும் ஒரு தம்ளர் வடிக்கட்டி, அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் காலையில் குடித்து விட வேண்டும். மறுபகுதியை, மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்து விட வேண்டும். இந்த மருத்துவ முறைகளை, தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !