காரசார உணவுகள் தொண்டைக்கு எதிரி
சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்பட்டு மிகுந்த தொந்தரவை தரும்.குறிப்பாக தொண்டையில் புண் வந்தால், அரிப்பு, எரிச்சல் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சில உணவுகளை தவிர்த்தால், தொண்டை புண்ணை விரைவில் சரிசெய்யலாம். நா ஊற வைக்கும் உணவுகள்: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்பு, வலியும் ஏற்படும். அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும். காரமான உணவுகள்: நிறைய பேர், 'சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது, காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும்' என்று நினைக்கின்றனர். ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது மட்டும் சாப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். ஆகவே மிளகாய், கிராம்பு, மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்த்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.