4 வயதில் 65 கி.மீ. ஓட்டமா?
துறுதுறு ஓட்டம்:ஐந்து வயதில், 65 கி.மீ. தூரத்தை 7 மணி 2 நிமிட நேரத்தில் ஓடிச் சாதனை செய்தான் சிறுவன் புத்தியா சிங். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறதா? இதற்காக, 'உலகின் இளம் மராத்தான் வீரன்' என்று லிம்கா உலக சாதனைப் புத்தகம் இச்சிறுவனை கெளரவித்தது. இச்சிறுவனின் இந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தவர் பிரான்ச்சி தாஸ். 2006-ல் நடந்த இச்சாதனையைத் தொடர்ந்து இச்சிறுவனின் வாழ்க்கையே மாறிவிட்டது. ஏன்? என்னாச்சு?புத்தியா சிங், 2006-ம் ஆண்டில் உலக ஊடகங்களில் ஸ்டார் சிறுவன். ஒடிஷா மாநிலம், குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவன். மற்ற குழந்தைகளைப் போல புத்தியா இல்லை. ஏனெனில், இவரது அம்மா வறுமை காரணமாக, புத்தியாவை வியாபாரி ஒருவரிடம் விற்று விட்டார். வயதுக்கு மீறிய எனர்ஜி, ஓட்டம். வறுமையைப் பற்றிக் கவலைப்படாத குழந்தையாக புத்தியா சிங் இருந்தான்.புத்தியாவை பணத்திற்கு வாங்கிக் கொண்டவரும் வசதியானவர் இல்லை. பசி இருந்தது, கூடவே குடியும் உண்டு. அதனால் புத்தியாவிற்குத் தினமும் அடி, உதை தான். வாங்கிக் கொண்டவரும் சரியில்லை என்பதை உணர்ந்த அம்மா, சிறுவனை மீட்குமாறு ஊரில் பிரபலமாக இருந்த பிரான்ச்சி தாஸ் என்ற ஜூடோ பயிற்சியாளரிடம் கேட்டுக் கொண்டார். புத்தியா மூன்றாவது கை மாறினான். ஆனால், இந்தக் கைகள் தான் அவனுடைய தலையெழுத்தை மாற்றியது. பிரான்ச்சி தாஸ் ஏற்கெனவே புத்தியாவை தெருவில் பார்த்திருக்கிறார். அவன் துறுதுறுவென்று ஓடுவதைக் கண்டு, மராத்தான் பயிற்சி அளிக்க அவனைத் தயார் செய்தார்.பயிற்சி:பிரான்ச்சி, பயிற்சியாளர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர். பணம் வாங்காமல், ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இடம், உணவளித்து அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பவர். விளையாட்டு மூலம் கைவிடப்பட்டவர்களின் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும் என்பது அவரது மாஸ் கருத்து. ம்… அந்தப் பட்டறையில் தான் புது ஹீரோவாக வலம் வந்தார் புத்தியா சிங்.புத்தியா ஏன் ஹீரோ ஆனான் தெரியுமா? மற்றவர்கள் எல்லாரையும் மிஞ்சிவிடும் அளவிற்கு அவனுடைய ஓட்டம் இருந்தது. தினமும் காலை 4 மணி முதல் 6 மணி வரை, பயிற்சி. அதைத் தொடர்ந்து 10 மணி வரை பள்ளி. மீண்டும் பயிற்சி. இப்படித்தான் புத்தியாவிற்கு மராத்தான் ஓட பயிற்சி அளிக்கப்பட்டது. ஒலிம்பிக்ஸுக்கு புத்தியாவை தயார் செய்வதே முதன்மை நோக்கமாக வைத்திருந்தார் பிரான்ச்சி.ஆனால், இதை மாநில அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. புத்தியாவை கொடுமைப்படுத்துகிறார் என்று தான் அரசாங்கம் புரிந்து கொண்டது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவனை ஓட வைப்பதே, அவருடைய நோக்கமாக இருந்தது.அன்பைப் புரிந்துகொள்வதற்குள் பல கைகள் மாற்றப்பட்ட சிறுவன், பிரான்ச்சியிடம் தான் அன்பை புரிந்துகொள்ள ஆரம்பித்தான். அவனுக்கு பிரான்ச்சி என்றால் உயிர். ஓடு என்றால் ஓடுவான், நில் என்றால் நிற்பான். அதைக் கட்டளையாகப் பார்க்காமல், அன்பாகப் பார்த்தான். அப்பாவிடம் மகன் செய்யும் அத்தனை சேட்டைகளும், பயிற்சிகளுக்கு நடுவில் அவர்களுக்கிடையில் இருக்கும். இருவருக்குமான உறவு எல்லையைக் கடந்து இருந்தது.அடுத்தது என்ன?யாரும் எதிர்பார்க்காத ஒன்று. பூரி முதல் புவனேஷ்வர் வரை புத்தியா ஓடப்போவதாக ஊடகங்களில் பிரான்ச்சி அறிவித்தார். இதைக் கேட்டு மாநிலமே அசந்துபோனது. இது சாதாரண விஷயம் கிடையாது. ஐந்து வயதுச் சிறுவன், 65 கி.மீ. தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும். இதைப் பலரும் எதிர்த்தார்கள். ஊடகங்களின் கேள்விகளுக்கு பிரான்ச்சி “ரஷ்யா, சீனா, அமெரிக்கா என பல நாடுகளில் 3 வயதிலேயே ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு குழந்தைகளைத் தயார் செய்கிறார்கள், நாம் தான் பல கட்டுப்பாடுகளை போட்டு, ஒரே குட்டையில் இருக்கிறோம்” என்றார் ஆவேசமாக.புத்தியாவிடம், “நீ ஓடுவதற்கு விரும்புகிறாயா?” என்று கேட்கப்பட்டது. அவன் “ஆமாம் ஓடணும்” என்றான். அவருடைய முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. ஒடிஷா மாநிலமே களை கட்டியது. தீவிர பயிற்சிக்குப் பின், அந்த நாள் வந்தது. பூரியிலிருந்து தொடங்கப்பட்டது சிறுவனின் ஓட்டம். பெரிய சாதனை என்பதை எல்லாம் சிறுவன் நினைக்கவில்லை. ஓட வேண்டும், பிரான்ச்சி சொல்லியிருக்கிறார், என்பதை மனத்தில் கொண்டு ஓடினான். ஊடகங்கள், மருத்துவ வசதிகள், ராணுவப் பாதுகாப்பு என பலரும் இச்சிறுவனின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்கள்.புவனேஷ்வரை நெருங்கும்போது, சிறுவனின் உடல் பலவீனமானது. ஆனாலும், இலக்கை மறக்கவில்லை. சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். பலமும், பலவீனமும் ஒருங்கிணைந்து உலக சாதனையைப் படைக்கச் செய்தது. கனவுஅடுத்தது ஒலிம்பிக்ஸுக்குத் தயார் செய்ய வேண்டும் என்ற கனவோடு இருந்த பிரான்ச்சிக்கு அரசாங்கம் செக் வைத்தது. சிறுவனின் வயதைக் காரணம் காட்டி ஓடுவதற்குத் தடை விதித்தது. மேலும், பிரான்ச்சியிடமிருந்து பிரித்து, இந்திய விளையாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டான் புத்தியா.புத்தியாவின் வாழ்க்கை மாறிப்போனது. பிரான்ச்சி வேறு ஒரு பிரச்னையால் கொலை செய்யப்பட்டார். கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஆனான் புத்தியா. இப்போது புத்தியாவை யாருக்கும் தெரியாது. ஆனால் புத்தியாவிற்கு ஓட வேண்டும் என்ற ஆசை இன்னும் இருக்கிறது. இப்போது அவனுக்கு வயது 15.