13 வயது தொழிலதிபர்
மும்பையைச் சேர்ந்த திலக் மேத்தா (Tilak Mehta) எனும் 13 வயதுச் சிறுவன் இப்போது ஓர் இளம் தொழிலதிபர். பேப்பர்ஸ் அண்டு பார்சல்ஸ் (Papers N Parcels - PNP) எனும் இவரது நிறுவனம் மும்பை நகருக்குள் அனுப்பும் கடிதங்களையும், சிறு பொதிகளையும் சில மணி நேரத்திற்குள்ளாகக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.திலக் இந்நிறுவனத்தைத் தொடங்கியதன் பின்னணி சுவாரசியமானது. இவர் ஒரு முறை தனது பாடப் புத்தகங்களைத் தன் உறவினர் வீட்டில் மறந்து வைத்துவிட்டார். அதைத் திரும்பப்பெற, வேலையிலிருந்து மிகவும் தாமதமாகவும், களைத்துப் போயும் வந்திருந்த தனது அப்பாவை மீண்டும் அலைய வைக்க வேண்டியிருந்தது. இந்தச் சம்பவமே நகருக்குள் கடிதங்கள் மற்றும் சிறு பொதிகளை அனுப்பவும், பெறவுமான சேவைகளை ஆரம்பிக்க உந்துதல் அளித்தது என்கிறார் திலக்.மும்பையில் மதிய உணவை அலுவலகங்களுக்குக் கொண்டு செல்வதற்கு டப்பாவாலாக்கள் எனப்படும் குழுவினர் ஏற்கெனவே இயங்கி வருகின்றனர். அவர்களின் வலைத் தொடர்பையே இந்தப் புதிய சேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள திலக் முடிவு செய்தார். நான்கு மாதங்களுக்கு மேல் சோதனை முயற்சியாக இச்சேவையை நடத்திப் பார்த்து, அதன் வெற்றியை உறுதி செய்து கொண்ட பின், இப்போது அதிகாரப்பூர்வமாக நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஸ்மார்ட் போனில் இச்சேவைக்கென தனி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட டப்பாவாலாக்களின் ஒத்துழைப்போடு, தனக்கெனவும் 200 தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் நாளொன்றுக்கு 1,200 கடிதங்கள்/பொதிகளை வினியோகம் செய்து வருகிறது. மும்பையில் ரயில் வழித்தடங்களில் உள்ள பகுதிகளில் மட்டுமே இப்போது இச்சேவை வழங்கப்படுகிறது.