துப்புரவு செய்யும் தீ
வனத் தீயில் அனைத்து மிருகங்களும் இறந்துவிடும் என்பது தவறு. மிருகங்கள் தீ நெருங்குவதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் கொண்டவை. இதனால் தீ பரவத் தொடங்கியதும், அவை ஓடித் தப்பித்துக் கொள்ளும். வேகமாக ஓட இயலாத சிறு பிராணிகள்தான் அதிகம் பாதிக்கும்.மெலனோஃபில் (Melanophila) என்னும் இனத்தைச் சேர்ந்த வண்டினம் தன்னுடைய உணரி (sensor) மூலம் அறிந்து, தீப்பிடித்து எரிந்த வனப் பகுதிக்குப் போகும். அங்கே தீயினால் கருகியிருக்கும் மரங்களில் முட்டைகளை இடும். உயிருள்ள மரங்கள் என்றால் அவற்றில் இருக்கும் சாறு, மரத்தில் துளையிடுவதற்கும், முட்டை பொரிப்பதற்கும் இடையூறாக இருக்கும் என்பதால் இப்படிச் செய்கிறது.எரிக்கப்பட்ட தாவரங்களில் இருந்து சத்துகள் பூமிக்குக் கிடைக்கும். குப்பை கூளங்கள் எரிவதால் புதிய தாவரங்கள் முளைத்து வளர இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. தீமை விளைவிக்கும் பூச்சி இனங்கள், நோய்வாய்ப்பட்ட தாவரங்களை அழித்து, துப்புரவுப் பணியையும் தீ செய்கிறது.- வனப்ரியா