மனிதாபிமானத் தலைவர்
பான் கி மூன்13.6.1944தென் கொரியா'நீங்கள் இளைஞர்களாக இருக்கும்போதுதான் உங்களுக்கான எதிர்காலம் திறந்திருக்கும். இந்த உலகம் அப்படித்தான்! ஏற்கெனவே அமைத்துவைத்த பாதைக்குப் பதிலாக கரடுமுரடான பாதையைத் தேர்வு செய்யும் நேரம். உங்கள் பாதையில் நீங்கள் வெற்றிபெற பல தடைகளைத் தகர்க்க வேண்டியது இருக்கும். ஆனால், நீங்கள் வந்து சேரும்போது, முயற்சி உங்களை மிகவும் வலுவானவர்களாக மாற்றி இருக்கும்' என, ஐ.நா. பொதுச் செயலராக இருந்தபோது, இளைஞர்களுக்கான ஒரு பதிவில் கூறி இருந்தார் பான் கி மூன்.சியோல் தேசியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 18 வயதில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக அமெரிக்க அதிபர் ஜான்.எஃப்.கென்னடியைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தச் சந்திப்புதான் பொதுவாழ்வில் ஈடுபட அவரை ஊக்கப்படுத்தியது. 1972இல் இந்தியாவுக்கான துணைத்தூதராகப் பணியாற்றினார். அதன்பிறகு, அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வெளியுறவுத் துறையில் பணியாற்றினார்.தென்கொரியாவில் இருந்து முதல் நபராக ஐ.நா.சபையின் 8வது பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2007 ஜனவரி 1, முதல் 2016 டிசம்பர் 31 வரை தொடர்ந்து இரண்டு முறை பதவியில் இருந்தார். பதவிக் காலத்தில், தான் அடைந்த தோல்விகள், மனவேதனைகள், தவறுகளை மனிதாபிமானத்துடன் ஒப்புக்கொள்ள அவர் தயங்கியதே இல்லை.சறுக்கல்கள் பல இருந்தாலும், அவரது விடா முயற்சியால் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். அவரின் நிர்வாகத்தில் ஐ.நா. சபை பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக உயர்ந்தது. சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்த புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த, பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி 193 நாடுகளைக் கையெழுத்திட வைத்தார்.உலக அமைதி, வறுமை ஒழிப்பு, பருவநிலை மாறுபாடு, பாலினப் பாகுபாடு, இளையோர் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த பான் கி மூனின் செயற்பாடுகள் போற்றத்தக்கவை.