உள்ளூர் செய்திகள்

கருவிகளால் அடைந்த முன்னேற்றம்

மனித வாழ்வின் முன்னேற்றம், பற்பல கருவிகளின் தோற்றத்தால் நிகழ்ந்தது. கைகளால் எண்ணற்ற செயல்களைச் செய்ய முடியும் தான். அதற்குத் துணையாகக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், நம் செயலாற்றலும் வினைத்திறனும் பன்மடங்கு மேம்பட்டன. கைகளால் இன்னொரு கருவியைக் கையாள முடியும் என்பது தான், மனித இனம் பிற விலங்குக ளிடமிருந்து வேறுபடக் காரணம். பிற விலங்குகளால் கருவிகளைக் கையாள இயலாது.முதற் கருவிகள் பகை விலங்கு களிடமிருந்து நம்மைக் காக்கப் பயன்பட்டன. கூரான பொருள்கள், உடைக்கும் ஆப்பு வகையிலான கருவிகள் என, அவை அமைந்தன. அவையே பிற்பாடு படைக் கருவிகளாகவும் வளர்ச்சி பெற்றன. தொழிற் கருவிகளாகவும் அமைந்தன.தமிழில் 'ஆய்தம்' என்ற சொல் இருக்கிறது. அது நுண்மையும் கூர்மையுமான ஒலியுடைய 'ஃ' என்கிற எழுத்தைக் குறிக்கிறது. ஆய்த எழுத்து. ஆய்ந்து அமைந்த ஒலிப்புடையது அவ்வெழுத்து. சார்பெழுத்துகளில் ஒன்று ஆய்த எழுத்து.தொழில்கள் யாவும் கருவிகளால் சிறந்தன. அதனால் தொழிற் கருவிகளுக்கு உரிய பூச்சாட்டு வழிபாடு நாள் ஒன்றும் வழக்கில் வந்தது. முற்காலத்தில் அவ்விடத்தில் போர்க் கருவிகளை வைத்தும் வழிபட்டனர்.'ஆயுத பூஜை' என்பது வடசொற்றொடர். 'ஆய்தம்' என்கிற தமிழ்ச்சொல்லில் உள்ள 'ஆய்ந்தெடுத்த நுணுகிய கூர்மையான' என்ற பொருள்வழியே 'ஆயுதம்' என வடமொழிக்குச் சென்றதாகவும் தனித்தமிழியலாளர்கள் கூறுவர். பூஜை என்கின்ற சொல்லும்கூட 'பூசெய்' என்னும் தமிழ்பற்றி இருக்கலாம் என்றும் கருத்துண்டு. பூவினைக் கொண்டு செய்கிற வினைகள்.எது எவ்வாறாயினும், கருவிகளைக் கொண்டாடும் திருநாள் என்ற வகையில், மக்கள் வாழ்வில் இடம் பெற்று விட்டது. தொழில் செய்யு மிடத்தை அந்நாளில் துப்புரவாக்கி வழிபடுவர். கருவிகட்குப் பூவினைகள் செய்து போற்றுவர்.இன்றைய முன்னேற்றங்களில் மனிதர்கள் கையாண்ட ஒவ்வொரு கருவியும் பங்களித்திருக்கிறது. ஏர்முனையும், அரிவாளும், மண்வெட்டியும், சம்மட்டியும், கோடரியும், சுத்தியலும், தறிகளும், வண்டிகளும் இல்லாமல் இன்றைய முன்னேற்றத்திற்கு நாம் வந்திருக்கப் போவதில்லை. இன்றைய உந்துகளும், மின்னியற்கருவிகளும், பெரும்பொருள் செய் ஆலைக் கருவிகளும் நம் வாழ்க்கையைச் சிறப்பாக்கி உள்ளன. அவற்றினை வணங்குதும்!- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !