வெங்கியைக் கேளுங்க!
சுத்தமான பி.எஸ்.4 எரிபொருள் என்கிறார்களே, பி.எஸ். என்றால் என்ன?ரா.ரமணன், 6ம் வகுப்பு, சேரன் குளோபல் மெட்ரிக் பள்ளி, சேடபட்டி, திண்டுக்கல்.Bhrath Stage' என்பதன் சுருக்கமே BS. கார், லாரி, ஸ்கூட்டர் போன்ற வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தும்போது, புகையை உமிழும். அப்போது அதனுடைய புகை அளவைக் கட்டுப்படுத்தும் தர அளவை BSIII, BSIV, BSV எனக் குறிப்பிடுகின்றனர். இத்தகைய இன்ஜின்கள், சிறப்பு வடிவமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்; மேலும் சில மாசுகள் நீக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் முதலியவை விற்பனைக்கு வரவேண்டும். இந்தியாவின் BS4 தரக்கட்டுப்பாடு Euro 4 என்கிற உலகத் தரத்துக்கு ஒப்பானது. Petrol Emission Norms (All figures in g/km)Emission Norm CO HC NOx HC+NOx PMBS-III 2.30 0.20 0.15 - - - - - -BS-IV 1.00 0.10 0.08 - - - - - -Euro 6 1.00 0.10 0.06 - - - 0.005Diesel Emission Norms (All figures in g/km)Emission Norm CO HC NOx HC+NOx PMBS-III 0.64 0.50 0.56 0.05BS-IV 0.50 0.25 0.30 0.025Euro 6 0.50 0.06 0.17 0.005அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் தொடர்பு உள்ளதா?தி.சமயந்தி, 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.ஏனைய பண்பாடுகள் போலவே, தமிழ் நாகரிகத்திலும் அன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய பல வகை நூல்கள் உள்ளன. அவற்றுள் சித்த மருத்துவ நூல்கள், கணக்கதிகாரம் போன்ற கணித நூல்கள், மாட்டு வாடகம் போன்ற கால்நடை பராமரிப்பு நூல்களும் அடக்கம். சங்க இலக்கியத்தில், நேரடியாக அறிவியல் தொடர்பான நூல்கள் இல்லை என்றாலும், அங்கும் இங்கும் அன்றைய அறிவியல் அறிவு குறித்த செய்திகள் படிக்கக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, நெடுநல்வாடை எனும் சங்க இலக்கியத்தில், மதுரை அரசனின் அரண்மனையைக் கட்டுவதற்கான தொடக்க நாள் குறிக்கப்பட்டது என்பதற்கான குறிப்பு உள்ளது.'விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து'என்பது அந்தச் செய்யுள்.இரண்டு நேரான குச்சிகளை (கோல்) ஒன்றின் அருகே ஒன்றாக நடவேண்டும். அந்தக் குச்சிகள், மிகச்சரியாக தெற்கு- வடக்காக நடப்பட்டிருக்க வேண்டும். காலையில் சூரியன் உதிக்கும்போது, இரு குச்சிகளின் நிழல்களும் மேற்கு நோக்கி விழும். சூரியன் வானில் மேலே உயர்ந்து வரும்போது, நிழலானது கடிகாரம் சுற்றும் திசையில் கிழக்கு நோக்கி நகரும். சரியாக உச்சி நண்பகலில், இரண்டு குச்சிகளின் நிழல் எப்படி இருக்கும்? தலைக்கு மேலே சூரியன் வரும்போது, இரண்டு குச்சிகளுக்கும் நிழலே உருவாகாது என்றுதான் நாம் கருதுவோம். சரிதான்! ஆனால், 9.9 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருக்கும் மதுரையில், எல்லா நாட்களிலும் சூரியன் தலைக்கு மேலே வராது! சூரியனின் சரிவுக்கோணம் 9.9 டிகிரியாக அமையும் ஏப்ரல் 15, ஆகஸ்ட் 27 ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே, மதுரையில் சரியாக நண்பகலின்போது, தலைக்கு மேலே சூரியன் வரும். அன்று மட்டுமே அந்த இரண்டு குச்சிகளும் நிழல் ஏற்படுத்தாது. இந்த இரண்டு நாட்களின் இடைப்பட்ட காலம் முழுவதும், சூரியன் வடக்குப் பக்கமாக இருப்பதால், உச்சிப்பொழுதில் இரண்டு குச்சிகளின் நிழல்கள் ஒன்றோடொன்று இணை நிழலாகி தெற்காக விழும். இதர நாட்களில் குச்சிகளின் நிழல்கள் இரண்டும் பிணைந்து வடக்காக விழும். இரண்டு நிழல்களும் பிணைந்து ஒரே கோடாக மாறினால், அதுதான் நண்பகல் என எளிதில் அறியலாம். நிழலின் நீளம், சூரியன் உதித்து எவ்வளவு காலம் நகர்ந்தது என்பதை உணர்த்தும். உச்சிப்பொழுது நிழல் எந்தப் பக்கத்தில் விழுகிறது, எவ்வளவு நீளம் கொண்டுள்ளது என்பதைக் கொண்டு, ஆண்டில் அன்றைய தேதி என்ன என்பதை நிர்ணயிக்கும் 'இருகோல் குறி' எனும் இயந்திரம் இருந்தது என்பதை, இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது. அந்தக் காலத்தில் நிழல் மூலம்தான் நேரத்தைக் கணக்கிட்டனர்.செயற்கை மழையை எப்படி பெய்ய வைக்கிறார்கள்? அது தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு உதவுமா?பா. ரக் ஷனி, 9ம் வகுப்பு, தூய அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலூர்.மேகம் உருவாகத் தூண்டுதல், மேகம் திரளத் தூண்டுதல், மேகத்தை மழை பொழியத் தூண்டுதல் என மூன்று வகைகளில், செயற்கை மழையைப் பெய்ய வைக்கிறார்கள். மேகம் இல்லாத சூழலில், மேகத்தை உருவாக்க கால்சியம் குளோரைடு, கால்சியம் கார்பைடு, கால்சியம் ஆக்ஸைடு முதலிய நீரை உறிஞ்சக்கூடிய பொருட்களைத் தூவி, காற்றில் உள்ள ஈரப்பதத்தைத் திரளச் செய்வார்கள்.இரண்டாம் நிலையில் உப்பு, அமோனியம் நைட்ரேட், உலர் பனி முதலியவற்றை சிறுசிறு நுண் துகள்களாகத் தூவினால், அவை நீர் திரள விதையாகச் செயல்பட்டு, மேகத்தை திரளச் செய்து, அதில் ஈரப்பதத்தைக் கூட்டும். இப்போதும் மேகத்தில் நீர், நீராவி வடிவில் வாயு நிலையில் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே, மேகத்தில் உள்ள நீர் கீழே விழாது. மூன்றாம் நிலையில் சில்வர் அயோடைடு போன்ற வேதிப்பொருட்களை, திரண்ட நீர் திவலைகளைக் குளிரச்செய்து, பனித்துளிகளாக மாற்றத் தூவுவார்கள். இந்த வேதிப்பொருட்கள் நீராவியைப் பனித்துளியாக மாற்றும். பனித்துளி அருகில் உள்ள வேறு பனித்துளிகளையும் சேகரித்து திரட்சி கொள்ளும். ஒருகட்டத்தில், பனித்துளி அளவு பெருத்து, காற்றில் மிதக்கமுடியாமல் கீழே விழும். அந்த வேகத்தில் பனித்துளி உருகி, நீர்த் திவலைகளாக மாறி, மழையாகப் பெய்யும். வேறு எங்காவது பெய்ய வேண்டிய மழையைத்தான், செயற்கை மழை இங்கே பெய்யவைக்கிறது; புதிதாக நீரை உருவாக்குவதில்லை. எனவே, இந்த முறையை பெருமளவு பரிந்துரைப்பது இல்லை.