உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமரங்களைப் போல் மற்ற தாவரங்கள் ஏன் உயரமாக வளர்வதில்லை?அ. அபிநயா, 11ஆம் வகுப்பு, ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலம், உளுந்தூர்பேட்டை.தாவர இனங்களில் காணப்படும் இதுபோன்ற வித்தியாசங்கள், விலங்குகளிலும் இருக்கின்றன. சிறிய எலி முதல் பெரிய யானை வரை இருக்கும் உயிரினங்கள்தான் அதற்கு சாட்சி. உயிர்வாழத் தகுந்த சூழ்நிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அந்தச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு புதிய உயிரினங்கள் உருவாகிவிடும். எனவேதான், வெப்பமண்டலப் புல்வெளியில் இருக்கும் புலியைப் போல, வெள்ளைநிற மயிர் செறிந்த தடிமனான தோலுடன் பனிப்பிரதேசத்தில் வாழும் பனிப்புலி இருக்கிறது. அதுபோலவே தாவரங்கள் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தாவரங்கள் உருவாகி வெவ்வேறு உயர அளவுகளில் வளர்கின்றன. உயிரியலில் ஒரு செயலைப் புரிந்துகொள்ள பரிணாமம் குறித்த புரிதல் அவசியம் தேவை.திசை காட்டும் கருவி வட திசையை எவ்வாறு சரியாகக் காட்டுகிறது? இது மாறவே மாறாதா?ப.கோ.சிரஞ்சீவி, 10ஆம் வகுப்பு, ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா உயர்நிலைப் பள்ளி,பெரியநாயக்கன்பாளையம், கோவை.பூமியின் காந்தப்புலம், வடதுருவத்தில் தென்காந்தத்தையும் தென்துருவத்தில் வடகாந்தத்தையும் கொண்டுள்ளது. ஆகவே, எதிரெதிர் காந்த முனைகள் ஈர்க்கப்படும். இதனால் காந்தமுள்ளின் வட முனை, வடதுருவத்தில் உள்ள தெற்கு காந்த முனை நோக்கி அமையும். திசைகாட்டும் கருவியில் உள்ள காந்த முள் வடக்கு, தெற்கு என உள்ளது. எனவே, ஒரே சமயத்தில் வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு திசைகளையும் காட்டுகிறது. அந்தக் கருவியில் வட தென் காந்த முள்ளில் இருந்து சரியாக வலது பக்கம் 90 டிகிரி திசையில் சிறிய முள்ளை வைத்தால் கிழக்கு திசையை அறியலாம்.பொதுவாக, காந்தத் திசைகாட்டும் கருவி வடக்கு தெற்காக உள்ளது. வடக்கையும் தெற்கையும் பிரித்து அறிய வடக்கு நோக்கிய பகுதியில் குறியிடுவது வழக்கம்.இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அழிந்து மீண்டும் உருவானால், முதலில் தோன்றுகிற உயிரி எதுவாக இருக்கும்?ம. ஸ்ரீபார்வதி, ௭ஆம் வகுப்பு, புதுச்சேரி.சுமார் 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், நமது பிரபஞ்சம் 'பிக்பாங்' எனும் பெருவெடிப்பு நிகழ்வில் உருவாகி தினமும் விரிந்து கொண்டே இருக்கிறது என்பது அறிவியல் கருத்து.பிரபஞ்சம் மாறுவதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன1. காலம் முழுக்க விரிந்து கொண்டே செல்வது.2. மேலே எறிந்த கல் ஓர் உயரம் வரை சென்று திரும்புவது போல, குறிப்பிட்ட காலம் வரை விரிந்து கொண்டே சென்று, மறுபடி பிரபஞ்சம் சுருங்கிவிடலாம். இதில் எது உண்மையில் நடக்கும் என்பது குறித்து இன்னமும் முடிவு தெரியவில்லை. ஒருவேளை பிரபஞ்சம் சுருங்கி, மறுபடி பெருவெடிப்பு நிகழ்வு ஏற்பட்டு புதிய பிரபஞ்சம் உருவானால், இந்தப் பிரபஞ்சம் அதே வரலாற்றைத் திருப்பி நிகழ்த்தாது. ஆகவே, எந்த உயிரினம் முதலில் தோன்றும் என்பதையும் சரியாகக் கூற முடியாது.டைம் டிராவலை எளிமையாக எப்படிப் புரிந்து கொள்வது?ச.சௌரவ், 10ஆம் வகுப்பு, எஸ்.பீ.ஜீ. வித்யாலயா பள்ளி, ஸ்ரீமுஷ்ணம்.பரிமாணம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நேர்கோடு, வட்டத்தின் கோடு முதலியவை எல்லாம் ஒரு பரிமாண வெளி. நேர்கோடாக இருந்தாலும், வட்டமாக இருந்தாலும் கோட்டின் மீது நகரவேண்டும் என்றால், முன்னே அல்லது பின்னேதான் நகரமுடியும். மொட்டை மாடி போன்ற சமதள மேற்பரப்பை இரு பரிமாண வெளி என்பார்கள். மொட்டைமாடியில் முன்னே/பின்னே அல்லது வலது/இடது என இரண்டு வகையில்தான் நடக்க முடியும். வளைந்து வளைந்து சென்றாலும் அந்தப் பாதையை மேற்சொன்னவாறு பிரித்துவிட முடியும். நீங்கள் ஒரு கொசுவாக இருந்து காற்றில் பறந்தால் முன்னே/பின்னே, வலது/இடது, மேலே/கீழே என மூன்று வகையில் பறக்க முடியும். இதனை முப்பரிமாண வெளி என்பார்கள். இதுபோல நான்காம் பரிமாணம் என ஒருவகை வெளி குறித்து கணிதவியல் ரீதியாக வரையறை செய்யமுடியும். ஐன்ஸ்டீன் தத்துவப்படி, இயற்கையில் முப்பரிமாண வெளி மற்றும் நான்கு பரிமாணங்கள் கொண்ட காலவெளியும் இருக்கிறது. நான்காம் பரிமாணம் காலம் என்பதால், நமது கண்களுக்குப் புலப்படுவது இல்லை. முன்னே/பின்னே, வலம்/இடம், மேலே/கீழே என எதிர் எதிர் திசையில் எப்படிச் செல்ல முடியுமோ அதே போல காலம் எனும் பரிமாணத்திலும் இரண்டு எதிர் திசைகளிலும் செல்ல முடியவேண்டும். நிகழ்காலம் என்ற இப்போதைய புள்ளியில் இருந்து எதிர்காலம் என்ற திசையிலும், கடந்த காலம் என்ற திசையிலும் செல்ல முடியும் எனக் கோட்பாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. இதைத்தான் காலப்பயணம் (Time travel - டைம் டிராவல்) என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !