போர் உத்தி
ராமு என்கிற மாணவன் தன் அத்தை வீட்டிற்கு வந்திருந்தான். அவன் வயல் வரப்புகளை சுற்றிப் பார்க்கும் போது ராஜாவும், விவசாயியும் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்.அவர்களின் பேச்சில் இருந்து விவசாயி, அரசனின் ரகசிய ஒற்றன் என்பதை ராமு அறிந்தான். மேலும் ஆர்வம் கொண்டவனாய் அவர்களின் பேச்சை உற்றுக் கேட்க ஆரம்பித்தான்.''நம்மால் எதிரிகளை அழிக்க முடியாது. அவர்களின் படை பலம் நம்மை விடப் பத்து மடங்கு பெரியது'' எனக் கூறினார் விவசாயி வேடத்தில் இருந்த ஒற்றன்.அரசரோ தன் நாட்டை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். துடித்தார். “நம்மிடம் உள்ள படையைக் கொண்டு எதிரியை தாக்க வல்ல சிறந்த வழியைக் கூறு” என்றார்.ராமு சட்டென ''அரசே! தாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டமைக்கு மன்னிக்கவும். தங்களின் பிரச்சனைக்கு என்னிடம் ஒரு தீர்வு உள்ளது'' என்றான்.''என்ன கூறு'' என்றார் அரசர். நாட்டைக் காப்பாற்ற யாருடைய கருத்தையும் ஏற்கத் தயாராக இருந்தார்.''எதிரி நாட்டுப் படைகளுக்குள் நம் வீரர்களை ஊடுருவச் செய்ய வேண்டும். நம் படைபலம் மிகப் பெரியது என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். நம் வீரர்களை வெல்வது கடினம் என்ற கருத்தையும் அவர்கள் மனதில் பதித்து விட்டால் அந்த மனோ பலம் நம்மை வெற்றி பெற செய்யும். அவர்கள் படை தோற்கும்'' என்றான்.ராமு சொன்னது போலவே செய்தார் அரசர். வெற்றியும் பெற்றார். வெற்றி விழாவின் போது அரசர் கேட்டார், ''உனக்கு எப்படி இப்படி ஓர் அருமையான உளவியல் சிந்தனை தோன்றியது?'' என்று.அதற்கு ராமு சொன்னான், ''போர்க்களம் ஒன்றை மாவீரர் அலெக்ஸாண்டர் எதிர்கொண்டபோது அவர் கையாண்ட உத்தி இது'' என்றான்.அவனைப் பாராட்டிய அரசர், மாணவனின் வேண்டுகோளை ஏற்று, நாட்டில் பல நூலகங்களைத் திறக்க ஏற்பாடு செய்தார்.ஏ. அபிநயாபன்னிரண்டாம் வகுப்பு,ஜவகர் பள்ளி, நெய்வேலி.