உள்ளூர் செய்திகள்

மேகங்களை விதைக்கலாம்!

வெயில் காலம். சூரியன் சுட்டெரிக்கிறது. சென்ற டிசம்பர் மாதம் பெய்த பெருமழையை யாரும் மறக்கவில்லை. இருந்தாலும், 'கொஞ்சம் மழை பெய்தால் நன்றாக இருக்குமே!' என்று மழைக்கு ஏங்கத் தொடங்கிவிட்டோம். இயற்கையாக மழை பெய்யாவிட்டால் என்ன? நாங்கள் செயற்கையாக மேகங்களைத் திரட்டி மழையை உருவாக்குவோம் என்று சில நாடுகள் செயற்கை மழையை உருவாக்குகின்றன. இந்தத் தொழில்நுட்பத்துக்கு 'கிளவுட் சீடிங்' (Cloud Seeding) என்று ஆங்கிலத்தில் பெயர். இதைப் பயன்படுத்தி மழை பெறுவதில் உலகிலேயே முதல் இடம் சீனாவுக்குத் தான். செயற்கை மழையை உருவாக்குவதில் மூன்று படிநிலைகள் உள்ளன.காற்றழுத்தம் உருவாக்குவது முதலாவது படி. எந்த இடத்தில் மழை பெய்ய வேண்டுமோ, அந்த இடத்தில் இருக்கும் மேகங்கள் மீது, சில வேதிப்பொருட்களைத் தூவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்கும். கால்சியம் கார்பைடு, கால்சியம் ஆக்ஸைடு, உப்பும் யூரியாவும் கலந்த கலவை அல்லது யூரியாவும் அமோனியம் நைட்ரேட்டும் கலந்த கலவை இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. விமானம் மூலமாகவோ, தரையிலிருந்து சிறிய ராக்கெட்டுகளை ஏவியோ, இந்த வேதிப்பொருட்கள் தூவப்படுகின்றன. இரண்டாவது நிலையில் மழை மேகங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றைத் தூவி இதைச் செய்கிறார்கள். இறுதியாக மழை மேகங்களைக் குளிரச் செய்து, மழை பெய்யச் செய்ய வேண்டும். வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனியைத் திரண்ட மழை மேகங்களின் மேல் தூவினால், அவை மேகங்களைக் குளிரச் செய்து, நீர்த்துளிகளாக விழ வைக்கும். குறிப்பிட்ட இடைவேளைகளில் ராக்கெட் மூலம் வேதிப்பொருட்கள் தூவப்பட்டபின், சுமார் 50 நிமிடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். சில சமயம் முயற்சி தோல்வி அடையவும் வாய்ப்பு இருக்கிறது. சுமார் 50 ஆண்டு காலப் பயன்பாட்டுக்குப் பிறகு, கிளவுட் சீடிங் முறையின் வெற்றி வாய்ப்பு 40லிருந்து 80 சதவிகிதம்வரை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்தியாவில் ராஜஸ்தான், மஹராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், அவ்வப்போது செயற்கை மழை பொழிவைப் பரிசோதித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !