சொற்களைச் சுருக்கலாமா?
எல்லாச் சொற்களும் இலக்கணம் வகுத்த விதிகளின்படியே வழங்கப்படுகின்றன. ஆனால், சில சொற்கள் இலக்கணம் வகுத்த விதிகள் அனைத்தையும் தாண்டி, ஏதேனும் ஒரு வகையில் மருவியும், திரிந்தும், கெட்டும், விகாரப்பட்டும் வழங்கப்படுகின்றன. அப்படி அவை மருவி வழங்குவதால், யாதொரு பொருட்குழப்பமும் ஏற்படுவதில்லை. இலக்கணமும் அதனை ஏற்றுக்கொள்கிறது.எடுத்துக்காட்டாக, 'அருமருந்தன்னபிள்ளை' என்ற சொற்றொடரை எடுத்துக்கொள்வோம். நெடுநாள் பிள்ளையில்லாமல் தளர்ந்து நோயுற்றாரைப்போல் இருந்தவர்க்குப் 'பிள்ளையில்லாக் குறையைப்' போக்கும் அருமருந்தினைப்போல் பிறந்த பிள்ளை என்ற பொருளில் அத்தொடர் வழங்கப்படுகிறது. அரு மருந்து அன்ன பிள்ளை. 'அன்ன' என்பதற்குப் 'போல' என்ற பொருளை எடுத்துக்கொள்ளலாம். அருமருந்தினைப் போல வந்த பிள்ளை என்பது அதன் பொருள்.அருமருந்தன்னபிள்ளை என்னும் சொற்றொடரை 'அருமந்தபிள்ளை' என்று வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படுவது சொல் மருவலாகும். நீளமான ஒரு சொல்லை ஒலிப்பின் சுருக்கம் கருதியும், எழுத்தின் சுருக்கம் கருதியும் அவ்வாறு ஆட்படுத்திச் சொல்லலாம். அருமருந்தன்னபிள்ளையை 'அருமந்தபிள்ளை' என்று மருவலோடு கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.ஊர்ப்பெயர்களை நாம் இவ்வாறு சுருக்கிக் கூறுவதைப் பார்க்கிறோம். கோயம்புத்தூர் என்பது ஓர் ஊரின் பெயர். அதன் திருத்தமான வடிவம் கோவன்புத்தூர் என்பது. அதனைக் 'கோவை' என்று சுருக்கி வழங்குகிறோம். கோயம்புத்தூர், கோவை என்று சுருக்கி வழங்கப்படுவதற்கு முறையான இலக்கண விதி ஏதும் இல்லை. ஆனால், அவ்வாறு சுருக்கி வழங்கப்படுவது இலக்கணத்திற்கு உட்பட்டதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கிறது. கோவை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டோம். இலக்கணமும் ஏற்றுக்கொள்கிறது. தஞ்சாவூர் என்பதுதான் முழுமையான ஊர்ப்பெயர். அதனைத் 'தஞ்சை' என்று சுருக்கிக்கொண்டோம். திருச்சிராப்பள்ளியைத் 'திருச்சி' என்று பாதியாக்கிக்கொண்டோம். திருநெல்வேலியை 'நெல்லை' என்கிறோம். கும்பகோணத்தைக் 'குடந்தை' என்கிறோம்.இப்படி ஒரு சொல்லின் பயன்பாட்டுச் சுருக்கம் கருதி, இலக்கணம் இத்தகைய சொல் மருவல்களை ஏற்கிறது. தமிழ்மொழியின் நெகிழ்வுத்தன்மைக்கு இஃது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.- தமிழ் மலை