உள்ளூர் செய்திகள்

சோழமண்டல சதகம்

தமிழ் இலக்கியத்தில், பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என்று இரண்டு வகைகள் உண்டு. சிற்றிலக்கியங்கள், பிரபந்தம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன. பிரபந்தங்கள் 96 வகைப்படும். அந்த 96 இல், சதகம் என்றொரு வகை உண்டு. சதம் என்பது நூறைக் குறிக்கும். சதகத்தில் மொத்தம் நூறு பாடல்கள் இருக்கும். 'சதம்' என்பதற்கு நிரந்தரமானது என்ற பொருளும் உண்டு.சில சதக நூல்களில் காப்பு, வாழ்த்துச் செய்யுள் போன்றவை இடம்பெற்று நூறுக்கும் அதிகமான பாடல்கள் அமைவதும் உண்டு. 'சோழ மண்டல சதகம்' என்னும் நூலில், 105 செய்யுட்கள் உள்ளன. சோழநாட்டின் பல்வேறு பெருமைகளைச் சிறப்பித்துப் பாடப்பட்ட நூல் இது.சோழநாடு, சோழ அரசர், அவர்களின் வீரம், ஆட்சிச் சிறப்பு, சோழ நாட்டு எல்லை, நிலவளம், நீர்வளம், காவிரி, வேளாண்மை, நெல்விளைச்சல், உழவர்கள், தலங்கள், திருப்பணி மக்கள், தலைவர்கள், வள்ளல்கள், கொடைச்சிறப்பு, வீரர்கள், சமயப்பெருமை, அடியார்கள், நாயன்மார்கள், சமயத் தலைவர்கள், இலக்கியங்கள், புலவர்கள் என இன்னும் பல அரிய செய்திகளின் தொகுப்பாக சோழ மண்டல சதகம் உள்ளது.கி.பி. 1723ஆம் ஆண்டு சோழநாட்டு வேளூர் ஆத்மநாத தேசிகர் என்னும் புலவரால் இந்நூல் இயற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !