நோய் எதிர்ப்பான் மஞ்சள்
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஹராப்பாவில் மஞ்சள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள் நிலத்துக்கு அடியில் விளையக் கூடியது. உலகின் 90 சதவீதம் மஞ்சள், இந்தியாவில் விளைகிறது.உலக மஞ்சள் வர்த்தக நகரமாக மகாராஷ்டிராவில் உள்ள சாங்லி விளங்குகிறது. மஞ்சளில் சுமார் 30 ரகங்கள் இருக்கின்றன. இந்திய, சீன ஆயுர் வேத மருத்துவத்தில் மருந்துப் பொருளாக மஞ்சள் பயன்படுத்தப் படுகிறது. சமையல், சமய சடங்குகள், விழாக்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. குங்குமம் தயாரிக்கவும் மஞ்சள்தான் உதவுகிறது. அழகு சாதன பொருளாகவம் இதனை பயன்படுத்துகிறார்கள். வேனிற்கட்டிகளுக்கு பத்தாகவும் குழைத்துப் போடுகிறார்கள். பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் செடியை வழிபாடிற்கு பயன்படுத்துகிறார்கள். ஆடை தயாரிப்பில் நிறமேற்றியாக உதவுகிறது.மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. அதனால் ஈரோடை மஞ்சள் நகரம் என்று அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் இந்தியாவின் குங்குமப்பூ என்று மஞ்சள் அழைக்கப் பட்டது.மஞ்சளுக்கு நிறமளிப்பது குர்குமின் என்கிற பாலி பீனைஸ் என்ற கலவை. நோய் எதிர்ப்பானாக மஞ்சள் இருக்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வளர விடாமல் மஞ்சள் தடுப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமன்படுத்தி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மஞ்சள் அல்சைமர் என்ற மறதி நோய் வராமல் தடுக்கிறது. அல்லது வரும் வாய்ப்பை ஒத்தி வைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.வைட்டமின் பி6, வைட்டமின் சி உட்பட நிறைய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நியாசின் என்ற பொருள் தோல் வறட்சியிலிருந்தும், ஒவ்வாமையிலிருந்தும் காக்கிறது. மஞ்சளை தினமும் உணவில் சேர்ப்பதால், புற்று நோய், நோய் தொற்று, இரத்த கொதிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். மஞ்சளை அளவுக்கு அதிகமாக சேர்த்தால், செரிமான பிரச்னை உண்டாகும்.