தினந்தினம் புதுப்புது அனுபவம்!
“பைலட்டுக்கும் டீச்சருக்கும் என்ன ஒற்றுமை? விமானத்தை பைலட் கட்டுப்படுத்துவார். டீச்சர் வகுப்பறையைக் கட்டுப்படுத்துவார். விமானி எப்படி பயணிகளை பத்திரமாக தரையிறக்க நினைப்பாரோ, அதைப்போலவே, மாணவர்களைப் பாதுகாப்பாக கரைசேர்க்க வேண்டும் என்பது ஆசிரியரின் எண்ணமாக இருக்கும்.” என்று சிரிக்கிறார் தேப்ஜானி முகர்ஜி. இந்த உதாரணத்தைச் சொல்லும் அவர், அனுபவப்பூர்வமாகவும் அதை உணர்ந்துள்ளார். ஆம், பைலட்டாக இருந்து, பின்னர் ஆசிரியராக மாறியவர் தேப்ஜானி. டில்லி குர்கானை சேர்ந்தவர். “என் குடும்பத்தில் யாரும் விமானி இல்லை. ஆனால், சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்பது என் விருப்பம். பல சிரமங்களைக் கடந்து, அமெரிக்காவில் சென்று பயிற்சி பெற்று விமானியானேன். திருமணத்துக்குப் பின்னர், எனக்கு குழந்தை பிறந்தது. ஒரு தாயாக எனது மகளின் தேவைகளை உணர ஆரம்பித்தேன். அதிக சுட்டித்தனம் கொண்ட அவள், வகுப்பறையில் நான் கூடவே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுவாள். என் அக்கறை எப்போதும் அவளுக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. இதனால், பைலட் பணியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வகுப்பறையில் அவளுக்குத் துணையாக இருப்பதற்கு பதில், ஆசிரியராகவே மாறிவிடலாம் என்று யோசனை உண்டானது. இதையடுத்து, ஆசிரியர் பயிற்சியில் இணைந்து ஆசிரியரானேன். பைலட்டாக விமானத்தில் பறக்க வேண்டும் என்ற விருப்பம் அவ்வப்போது எழும். எனினும், அதை விட முக்கியப் பணி ஆசிரியராக இருப்பது என்பதை உணர்ந்துள்ளேன். தினந்தினம் புதுப்புது அனுபவங்கள்தான். ஒருநாளைப் போல, அடுத்தநாள் வகுப்பறை இருப்பதில்லை. குழந்தைகள் அதிசயமானவர்கள். அவர்கள் நமக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடங்களை சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.” என்கிறார்.