முதல் தொல்லியலாளர்!
உலகில் பழைய நாகரிகங்களில் ஒன்று மெசபடோமியா. இது, இன்றைய ஈராக், குவைத், சிரியா, துருக்கி ஆகிய பகுதிகளைக் கொண்டதாகச் சொல்லலாம். அதன் அரசராக இருந்தவர், நபோநைடஸ் (Nabonidus கி.மு. 555 - 539). அவருக்கு தமது முன்னோர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் நிறைய ஆர்வம். அதனால், தொடர்ச்சியாகப் பல அகழாய்வுகளைச் செய்தார். சிஹ்ஹுராட் உட்பட பல பழமையான கட்டடங்களை மறுநிர்மாணம் செய்தார். இப்படிச் செய்த அகழாய்வுகள் மூலமாக, அவர் நாரம்சின் (Naram-Sin) என்ற அரசரது நினைவிடத்தின் மிச்சங்களைக் கண்டுபிடித்தார்.அக்காடிய அரச வம்சத்தை (Akkadian Empire) (காலம்: கி.மு. 2334 -- 2154) உருவாக்கி, அரசின் எல்லையை விரிவாக்கி, அக்காடிய அரசின் தன்னிகரற்ற அரசர் என பெயர் பெற்ற சார்கான் (Sargon) என்ற அரசரின் பேரன்தான் இந்த நாரம்சின். தமது தாத்தா பற்றிய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ததும், நபோநைடஸ் பெருமகிழ்ச்சி அடைந்தார். தமது கண்டுபிடிப்பு பற்றியும், தாம் எடுத்துக்கட்டிய பல கோவில்கள் பற்றியும், சில குறிப்புகளை மண் உருளைகளில் (Cylinders of Nabonidus) பொறித்து வைத்தார் நபோநைடஸ். நவீன ஆய்வாளர்கள், நபோநைடஸ், நாரம்சின் வாழ்ந்த காலம் (கி.மு. 2254 -- 2119) பற்றிச் செய்திருந்த கணிப்பு மிகையானது என்று கூறுகின்றனர். அக்காலகட்டத்தில் இருந்த குறைவான வசதிகளைக்கொண்டு அவர் செய்த ஆய்வுப்பணி, இணையற்ற ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆகவேதான், அவர் உலகின் முதல் தொல்லியலாளர் (First archaeologist) என்று பாராட்டப்படுகிறார்.இவரது மகளான இளவரசி என்னிகால்டி (Ennigaldi) உலகின் முதல் அருங்காட்சியகத்தை உருவாக்கியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.