உள்ளூர் செய்திகள்

தீப்பிடித்த பச்சைமரங்கள்!

இந்தியக் காடுகளில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் பற்றியும், அவற்றோடு போராடும் முறைகள் பற்றியும், வனத்துறைப் பணியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற உதவி வனப் பாதுகாவலர் (ஓய்வு) டி. இரத்தினசாமி நம்மோடு பகிர்ந்துகொள்ளும் சில செய்திகள்...முப்பது ஆண்டுகளுக்கும் மேலான என்னுடைய வனத்துறைப் பணி அனுபவத்தில் பல காட்டுத்தீ சம்பவங்களை நேரில் எதிர்கொண்டிருக்கிறேன். சிப்பந்திகளுடன் காட்டுக்குள் தீயை அணைக்கப் போராடிய அனுபவங்கள் பெற்றிருக்கிறேன். நாட்டில் தீப்பிடிப்பதற்கும் காட்டில் தீப்பிடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக வீடுகளில் தீ விபத்துகள் ஏற்படுவதற்கு, கேஸ் அடுப்பு, மின் கசிவு போன்றவையும் சில கவனக்குறைவுகளுமே காரணம். ஆனால், காடுகளில் தீப்பிடிக்க பலப்பல காரணங்கள் உள்ளன.வீடுகளிலோ, தொழிற்சாலைகளிலோ தீப்பிடித்தால், உடனடியாக அது தெரிந்துவிடும். புகை, சூடு இவை காட்டிக் கொடுத்துவிடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாகத் தீயை அணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவிப்பதும் எளிது. தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு அவர்கள் வருவதற்கான சாலை வசதிகளும் இருக்கின்றன. தொழிற்சாலைகளிலும், திரையரங்குகளிலும், மால்களிலும் தீயணைப்புக் கருவிகள் கட்டாயம் வைக்கப்பட்டிருக்கும். வீடுகளில் தீயை அணைப்பதற்குத் தண்ணீராவது இருக்கும். தீப்பற்றக்கூடிய பொருட்களை இயன்றவரை அப்புறப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் வாய்ப்புகள் அதிகம்.ஆனால், காடுகளில் தீப்பிடித்தால் அது ஓரளவு பரவிய பிறகுதான் தெரியவரும். சில சமயங்களில் கட்டுப்படுத்த இயலாத அளவு பரவிய பிறகுதான் தெரியும். காட்டுத்தீ பிடித்த பல சம்பவ இடங்களுக்கு வாகனங்கள் செல்ல வசதி இருக்காது. நடந்துதான் போகவேண்டி இருக்கும். நள்ளிரவில் காட்டில் தீப்பற்றி எரியும்போது, அக்கம்பக்கத்தில் இருக்கும் ஊர் மக்களைத் திரட்டிக்கொண்டு பல கிலோமீட்டர் நடந்து போய்த் தீயை அணைக்க வேண்டியிருக்கும்.முதலில் அப்படி வருவதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். தொடர்ந்து காட்டுக்குள் தீயை அணைக்க முயலும் சிப்பந்திகளுக்கும், ஊர் மக்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வசதி செய்துகொடுப்பது பெரும் சவாலான விஷயம். ஓரிடத்தில் தீயை அணைப்பதற்குள் இன்னோர் இடத்தில் தீ பரவத் தொடங்கிவிடும்.காட்டுக்குள் தீயை அணைக்க பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கெனவே தீத்தடுப்புக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களும், வேட்டைத் தடுப்புக் காவலர்களும் கோடைக்காலத்தில் வனத்துக்குள் விழிப்பாகக் கண்காணிப்புச் செய்வார்கள்.வனத்துக்குள் ஆங்காங்கே 'வாட்ச் டவர்' என்னும் அமைப்புகளைச் செய்திருக்கிறார்கள். அதன் மீது ஏறி நின்றும் கண்காணிப்பார்கள். செல்போன் சமிக்ஞை கிடைக்காத இடங்களில் வாக்கிடாக்கி மூலம் தகவல் பரிமாறிக் கொள்வார்கள்.கோடை வரும் முன்பே வனங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் இடையில் வனப் பகுதியில் 'தீத்தடுப்புக் கோடு' என்ற பணியை மேற்கொள்வார்கள். அதாவது, குறிப்பிட்ட அகலத்துக்கு வன எல்லைகளில் குப்பை, இலை, சருகுகள் இல்லாமல் சுத்தம் செய்து வைத்திருப்பார்கள். பட்டா நிலங்களில் பற்றும் தீ, வனத்துக்குள் நுழையாமல் இது தடுக்கும்.பற்றிவிட்ட தீயை அணைக்கும் முறைகளில், 'எதிர்த்தீ வைத்தல்' என்று ஒன்று உண்டு. இதை 'பேக்ஃபயர்' (Back fire) என்போம். அதாவது, வனத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்தால், பெரும்பாலும் அகலமான பரப்பின் மழைநீர் மலையில் இருந்து வடிவதைப் போல பரந்துபட்ட பரப்பில் மளமளவெனக் கீழிறங்கும். அப்போது இந்தத் தீ இறங்கும் சரிவுகளில் கொஞ்சம் இடைவெளி விட்டு, சுமார் இருபது அடி அகலத்துக்கு, தீப்பிடிக்கும் செடி, கொடி, காய்ந்த மரம் மட்டைகளை அப்புறப்படுத்தி, சில கிலோ மீட்டர் நீளத்துக்குச் சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இதனால், பரவும் தீ, இந்த இடம் வந்தும், மேற்கொண்டு எரிபொருள் இல்லாமல் நின்றுவிடும். இதைத்தான் 'பேக்ஃபயர் ஆப்பரேஷன்' என்பார்கள்.மாக்ட்ரில் என்றும் ஒன்று உண்டு. வனத்தில் தீப்பிடிக்காதபோதும், செயற்கையாக, கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்படி தீயை மூட்டி, அதனை அணைப்பதற்குப் பணியாளர்கள் தயாராக இருக்கிறார்களா என, திடீர் பரிசோதனை நடத்துவோம். அப்போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்து அவற்றைக் களைவோம்.என் அனுபவத்தில் ஒரு வித்தியாசமான வனத் தீச் சம்பவத்தைச் சொல்கிறேன். கொடைக்கானலில், மிகத் தொலைவில் இருந்த பைன் மரத் தோட்டங்களில் தீப்பிடித்துவிட்டது.ஆட்களைத் திரட்டி, தீத்தடுப்புக் கருவிகளுடன் அங்கு சென்றுசேர்ந்து போராடினோம். பைன் மரத்தில், தீப்பிடிக்கும் எண்ணெய்ப் பசை இருக்கும். அதனால் பச்சை மரங்களே குபீர் என தீப்பிடித்து எரிந்தன. அவற்றில் ஒரு வகையான பூச்சி, கூடு கட்டியிருக்கும். அது பஞ்சுப்பொதி போல இருக்கும்.காற்று பலமாக வீசும்போது, தீப்பிடித்த பூச்சிக்கூடு பறந்துசென்று வெவ்வேறு இடங்களில் விழுந்து, தீப்பிடித்தது. பைன் மரங்களின் இலைகள் ஊசிபோல இருக்கும். கீழே விழுந்த அந்த இலைகள், தரையில் அரைஅடி உயரம்வரைகூட இருக்கும். அவையும் தீப்பற்றித் தரைவழித் தாக்குதல் நடத்தின. இப்படிப் பன்முனைத் தாக்குதல்களை மிகச் சிரமப்பட்டு எதிர்கொண்டு தீயை அணைத்தோம்.காட்டுத் தீயை உருவாக்கும்கழுகுஓர் ஆச்சரியமான விஷயம் பிளாக் கைட் (Black kite) என்னும் வகைக் கழுகு, தீப்பிடித்த வெட்டவெளிகளில் இருக்கும் புழு பூச்சிகளை விரும்பி உண்ணும். அதற்காகக் காடுகளின் அருகில் எங்காவது நெருப்பு எரிந்தால் அதிலிருந்து தீக் கங்கு இருக்கும் குச்சியை லாவகமாகக் கால்களால் பற்றிக் காட்டுக்குள் போட்டுத் தீயை உருவாக்கவும் செய்யும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !