உள்ளூர் செய்திகள்

மகாபாரதத்தைக் கன்னடத்தில் எழுதியவர்

கன்னட மொழியில் முதன் முதலில் மகாபாரதத்தை இயற்றியவர், குமார வியாசர் (kavi kumara vyasa). இவரது இயற்பெயர் நாரணப்பா. கர்நாடகத்தில் கதக் (Gadag district) மாவட்டத்தில் 15ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.விஜயநகர மன்னரான இரண்டாம் தேவராயர் (1424 - 1446) ஆட்சிக்காலத்தில் புகழ்பெற்ற அரசவைக் கவியாகத் திகழ்ந்தவர். இவர் எழுதிய நூலின் பெயர், 'கர்நாடக பாரத கதாமஞ்சரி'. அதாவது கர்நாடகத்தின் மகாபாரதம் என்று பொருள். கதக் நகரில் அமைந்துள்ளது வீரநாராயணர் கோவில். வியாசர், இக்கோவிலின் மண்டபத்திலுள்ள ஒரு தூணின் கீழ் அமர்ந்து எழுதுவாராம். நீராடிவிட்டு, ஈர ஆடையுடன் அமர்ந்து எழுதத் தொடங்கி, ஆடை உலரும் வரை எழுதுவாராம். இத்தூண் 'கவி குமாரவியாசா ஸ்தம்பா' என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இக்கோவிலுக்குச் சென்றால் இந்தத் தூணைக் காணலாம்.சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட மகாபாரதத்தில், மொத்தம் 18 பர்வங்கள் (பிரிவு) உள்ளன. கன்னட நூலில் 10 பர்வங்கள் மட்டுமே எழுதப்பட்டன. பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதயுத்தம் வரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதர பர்வங்கள் மற்றொரு கவியான லக்ஷ்மீசா [lakshmeesa] என்பவரால், பல ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது. கவிநயம்மிக்க, கருத்தாழம் செறிந்த மிகச்சிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது, கர்நாடக பாரத கதாமஞ்சரி. இந்நூலிற்கு கடுக்கின பாரதம் [Gadugina baratham], குமாரவியாச பாரதம் (kumaravyasa bharata) என்ற பெயர்களும் உண்டு.- பாரதி சந்திரசேகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !