வறண்ட ஊருக்குள் மழைநீர்
சாதனை : மழைநீர் சேகரிப்புமக்களின் சுகாதாரத்தைக் காக்க, அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, 100 சதவீதம் மழைநீர் சேகரிப்பு திட்டம் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டது. மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ள ஊராட்சிதான், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பட்டினம்.இத்தனை மாற்றங்களுக்கும் காரணமாக இருந்த ஜேசுமேரி, 1996ஆம் ஆண்டு ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராவதற்கு முன்பே, அருகிலுள்ள ஊராட்சிகளின் எல்லைப் பிரச்னைகளைப் பேசித் தீர்த்து, கிராம மக்களின் அன்பைப் பெற்றுள்ளார். கிராம வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க, அன்று தொடங்கிய அவரது பணி 20 ஆண்டுகள் தொடர்ந்தது. வறண்ட ஊருக்குள் மழைநீர் சேகரிப்பின் மூலம், குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்த்துள்ளார். ஆறு மாதத்தில் ஊர் மக்கள் பங்களிப்புடன் ஊருணியை ஆழமாகத் தூர்வாரி, உள்ளே இரண்டு குளங்களையும் வெட்டி இருக்கிறார்கள். தெருக்கள், வீடுகளில் சேரும் மழைநீரை பைப் வழியாக ஊருணிக்குக் கொண்டு வருவதுபோல் அமைத்தார்கள். இதன் மூலம் ஊருணியில் தண்ணீர் நிறைந்து விவசாயமும் செழித்தது. குறிப்பாக, மதுக்கடைகளை அப்புறப்படுத்திய ஜேசுமேரியின் பணி கவனிக்கப்பட்டது. ஊராட்சியில் உள்ள பெண்களை ஒன்றுதிரட்டி, கிராமக் கூட்டத்தில், மதுபானக்கடைகளுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் மூலம் அங்கு இயங்கிய மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தினார்.அதிரடியான மாற்றங்களால் இந்த ஊராட்சியின் புகழ் பரவி, மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் தேடி வந்தன. அப்போது உலகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 40 சிறந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் இந்தியாவுக்கான பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் ஜேசுமேரி!அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயற்படுத்தியதற்காக, கிராம சேவா ரத்னா, உத்தமர் காந்தி, நிர்மல் கிராம் புரஸ்கார், சிறு சேமிப்பு விருது என 30க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று, மைக்கேல் பட்டினம் தமிழகத்தின் vமுன்னோடி ஊராட்சியாக இருக்கிறது. 2017இல் இவர் மறைந்தாலும், இவரது பணிகள், இன்றும் கொண்டாடப்படுகின்றன.