காட்டுத் தீ வகைகள்
அற்புதமான காடுகளுக்கு எப்பொழுதுமே பெரும் அச்சுறுத்தலாக இருப்பது காட்டுத்தீ. தொல்லுயிர் எச்சங்கள் (Fossil) மூலம் கிடைத்த தகவலின்படி, காடுகள் தோன்றிய காலம் முதலே, அவை காட்டுத்தீக்கும் இரையாகியுள்ளது என்பது தெரிகிறது. காடுகளுக்கு தீயால் ஏற்படும் பாதிப்பு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் மரங்கள் செடிகளை அழிப்பது மட்டுமன்றி, பல்லுயிர்க்கான பன்மை வாழ்க்கைச் சூழலையும் தீ அழித்துவிடுகிறது. இப்படிக் காடுகளை அழிக்கும் தீயில் பல வகைகளும் உண்டு. அவை: மேற்பரப்புத் தீ (Surface Fire)காடுகளின் தரையில் உதிர்ந்த இலை, மட்டை காய்ந்த புல் போன்ற குப்பைகள் பல அடுக்குகளில் மண்டிக் கிடக்கும். இவ்வகை தீ, மண்டிக் கிடக்கும் குப்பைகளின் மேற்பரப்பில் மட்டும் பற்றி எரிவது. மற்ற வகைத் தீயை அணைப்பதைவிட, இவ்வகைத் தீயை அணைப்பது சுலபம். தரைத் தீ (Ground Fire)மேற்பரப்பிலிருந்து பல அடுக்குகளில் மக்கிக் கிடக்கும் தாவரக் குப்பைகளில் பற்றி எரிவது ஆகும். இது மிக மெதுவாகப் பரவும். ஆனால், இவ்வகை தீ எங்கே பற்றியுள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். இவை மேற்பரப்பில் தெரியாது. அதனால் இதை அணைப்பதும் கடினம். உச்சித் தீ (Crown Fire)மேற்பரப்பில் பற்றும் தீ, சில சமயங்களில் பக்கத்தில் படர்ந்திருக்கும் செடிகளிலும், மரங்களிலும் பற்றி, காட்டு மரங்களின் உச்சி வரை பற்றிக்கொள்ளும். அப்படிப் பற்றிக்கொள்ளும் தீ, காற்றின் திசையில் வேகமாகப் பரவும்.தீப்புயல் (Fire storm) வெகு வேகமாகப் பரவும் தீ, அதிக வெப்பத்தை உண்டாக்கும். இதன் விளைவாக, அதிக வெற்றிடம் உண்டாகும். வெற்றிடத்தை நிரப்ப அதிக அளவு காற்று, அதிவேகத்தில் உள்ளே இழுக்கப்படும். அதிவேகக் காற்று தீயுடன் சேர்ந்து மேலே தீப்புயலாகப் பரவும்.