நான் யார்?
நான் ஆட்சி செய்தது இந்தியாவாக இருந்தாலும் பிறந்தது இங்கிலாந்தில் உள்ள விண்ட்ஸர் என்ற இடம்.ஆரம்பகாலக் கல்வியை வீட்டிலேயே கற்று, அதன் பிறகு, ஹெர்ட்ஃபோர்டுஷயரில் இருந்த லாக்கர்ஸ் பார்க் பள்ளியில் சேர்ந்தேன். பிறகு கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியில் பொறியியல் பயின்றேன். அப்போதே, 1920ல் கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றேன்.அதற்கு அடுத்த வருடமே இளவரசர் எட்வர்டு உடன் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் சென்றேன். கப்பற்படையில் பணியாற்றினாலும் படிப்பை நிறுத்திவிடவில்லை. அதன் பிறகு, கிரீன்விச், ராயல் நேவல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கற்றேன்.அப்போதைய இங்கிலாந்து பிரதமரான, வின்ஸ்டன் சர்ச்சில் என் நண்பர். இருந்தாலும் என் சொந்தத் திறன் மற்றும் கடும் உழைப்பினாலேயே பல உயர் பதவிகளைப் பெற்றேன். கப்பற்படையில் படிப்படியாக உயர்ந்து கேப்டன் ஆனேன்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 1947ல் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டேன். இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறுவதற்கும் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் என்று தனித்தனி நாடுகளாகப் பிரிப்பதற்குமான விவகாரங்களைத் திறமையுடன் கையாண்டேன்.ஒன்றிணைந்த இந்தியாவாகச் சுதந்திரம் பெற வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால், அதில் ஏற்படும் சிக்கல்களை அறிந்திருந்ததால் என்னால் பிரிவினையைத் தடுக்க முடியவில்லை.சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவைவிட்டு வெளியேறினர். ஆனால் நான், ஜூன் 1948 வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினேன். அதன் பிறகு இங்கிலாந்து திரும்பி 1949ல் மீண்டும் கப்பற்படையில் தளபதியாகப் பணி தொடங்கினேன்.பிரிட்டிஷ் வார் மெடல், விக்டரி மெடல், அட்லான்டிக் ஸ்டார், பர்மா ஸ்டார், இத்தாலி ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்கள், விருதுகளைப் பெற்றேன்.ரைட் ஹானரபிள், பர்மாவின் முதல் கோமகன் என்றெல்லாம் என்னை அழைப்பார்கள்.பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி அரசப் பிரதிநிதி (Viceroy), சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் போன்ற பல்வேறு சிறப்புகளால் அறியப்படுகிறேன்.எங்கே, என் முழுப்பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்...லூயி பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலாஸ் மவுன்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas Mountbatten) என்கிற மவுன்ட் பேட்டன் பிரபு.பிறப்பு: ஜூன் 25, 1900மறைவு: ஆகஸ்ட் 27, 1979