உலகப் புகழ் ஓவியர்
படம் வரைய பேனா, பென்சில், வண்ணங்கள், தூரிகை (பிரஷ்) இப்படி ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே இல்லாமல் கரித்துண்டை வைத்து ஓவியங்கள் வரைய கற்றிருக்கிறார் உலகப் புகழ்ப் பெற்ற ஓவியர் 'வின்சென்ட் வில்லியம் வான்கா' (Vincent Willem vanGogh). தெற்கு நெதர்லாந்தின் ஒரு சின்ன கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில், 1853 மார்ச் 30 அன்று பிறந்தார். இவரைப் பற்றிச் சொல்லும்போது ரசனையான தகவல் ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்று இறுதியில் பார்க்கலாம். வான்காவின் தந்தை ஓவியக் கண்காட்சி நடத்துபவராக இருந்தார். அதனால், சிறுவயது முதலே வான்காவிற்கு ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு இருந்தது. கான்ஸ்டான்டின் ஹய்ஸ்மேன்ஸ் (Constantijn C. Huysmans) என்ற புகழ்பெற்ற ஓவியர் வான்காவிற்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்தார். தனது உறவினர் ஒருவர் லண்டனில் நடத்திய ஓவியக் கண்காட்சி ஒன்றுக்கு வான்கா விற்பனையாளர் பணிக்குச் சென்றார். பின்னர், பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சிறிது காலம், மத போதகராகவும் பணியாற்றினார். இந்த வேலைகள் எதுவும் அவருக்கு மன நிம்மதியைத் தரவில்லை. முப்பது வயதுக்கு மேல்தான் ஓவியங்கள் வரையத் தொடங்கினார். முதலில் கரித்துண்டுகளை வைத்து வரைந்தார். பின்னாளில் தனது தம்பி அளித்த பண உதவியால் முறையான ஓவியங்களை வரையத் தொடங்கினார். தன் வாழ்நாளில் கடைசி ஆறு ஆண்டுகளில்தான் இவர் அதிகமான ஓவியங்களை வரைந்தார். வான்கா 1890, ஜூலை 29 ல் மரணமடைந்தார்.இதில், ரசனையான தகவல் என்னவென்றால், அவருக்கு கிடைத்த உலகப் புகழும், அவர் வரைந்த ஓவியங்கள் உலக மக்களால் கொண்டாடப்படுவதும் அவரது மரணத்துக்குப் பிறகுதான்! கலைக்கு வறுமை ஒரு பொருட்டல்ல, மன உறுதிதான் தேவை. அதற்கு வான்காவின் ஓவியங்களும், அவருடைய முயற்சியுமே சாட்சி.