UPDATED : ஜூன் 01, 2024 03:04 PM | ADDED : ஜூன் 01, 2024 03:02 PM
முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்போதுமே பத்திரிகை புகைப்படக்கலைஞர்களின் பிரியத்திற்கு உரியவர்.தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் சங்கத்தை துவக்கிவைத்து அவர் பேசுகையில் தனக்கும் புகைப்படக்கலைஞர்களுக்கும் உள்ள பிரியத்தை மனம்விட்டு பேசினார்.
இந்த பிரியம் கோவை புகைப்படக்கலைஞர் சுப்புவிடம் கொஞ்சம் அதிகமாக உண்டு.சுப்புவின் பெயரைக்குறிப்பிட்டு 'மறக்கமுடியுமா' என்ற தலைப்பில் அவருக்காக, அவரது புகைப்பட திறமையை பாராட்டி ஓரு தனிக்கட்டுரையே முரசொலியில் கடிதமாக எழுதியுள்ளதே அதற்கு சான்று.
அப்படிப்பட்ட சுப்பு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அறிவாலயத்தில் கருணாநிதியின் அபூர்வ புகைப்படங்களைக் கொண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைத்துள்ளார்.கருணாநதியின் இளமைக்கால படங்கள் பல இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருக்கிறது,அது மட்டுமின்றி அவரது உடற்பயிற்சி யோகா பயிற்சியைக்கூட படமாக்கியுள்ளனர்.
குடும்பத்தினருடன்,தலைவர்களுடன்,கலைஞர்களுடன் என்று அவரது படங்கள் ஆயிரக்கணக்கில் நீள்கிறது,வரலாற்று ஆர்வலர்களுக்கும் புகைப்பட பிரியர்களுக்கும் இந்த புகைப்படக் கண்காட்சி ஒரு விருந்தாகும்.வருகின்ற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது,அனுமதி இலவசம்.-எல்.முருகராஜ்