அன்பும் அவரே அக்கினியும் அவரே!
தேவன் அன்பானவர் என்பதை மட்டுமே அறிந்திருக்கும் நாம், ''அவர் தான் அன்பு செய்வாரே! அதனால் எவ்வளவு தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, பாவமன்னிப்பு தேடிக்கொள்ளலாம் என எண்ணினால் அவர் கண்டிப்பானவராக மாறிவிடுவார்.ஜான் ஆர்.ரைஸ் என்ற வேதபண்டிதர் இதுபற்றி கூறும் போது, ''நரகம் அவியாத அக்கினியுள்ள இடம் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளதை நான் அப்படியே நம்புகிறேன். என் தேவன் நீதியையே செய்வார்,'' என்கிறார். ஆம்... அங்கே எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். நாம் தவறு செய்தால் அதற்குள் எரிய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 'அன்பாயிருக்கிற தேவன் பட்சிக்கிற அக்கினியாகவும் இருக்கிறார்'. நெகோமியாவும், தானியேலும், மோசேயும் அவரைப் பயங்கரமான தேவன் என்றார்கள். ஏசாயா அவருடைய உக்கிரம், கண்டிதம் (கண்டிப்பு), கோபம் இவைகளைக் குறித்து எழுதியிருக்கிறார். ''ஜீவனுடைய தேவனின் கைகளில் விழுவது பயங்கரமாயிருக்கும்(எபி.10:31) என்ற வசனமும் இங்கே நினைவு கூரத்தக்கது.இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, கர்த்தருக்கு பயந்து நடப்போம். எல்லாருக்கும் நல்லதையே நினைப்போம்.