ஆள்பவன் ஊழல் செய்தால்!
அரசுக்குரிய வரி கட்டாமல் ஏமாற்றுவோர் பலர். பைபிள் இச்செயலைக் கடுமையாகக் கண்டிக்கிறது.ரோமர் 13:7 வசனத்தில், ''யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள். எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்கு தீர்வை செலுத்த வேண்டியதோ அவனுக்கு தீர்வையையும் செலுத்துங்கள். எவனுக்கு பயப்பட வேண்டியதோ அவனுக்கு பயப்படுங்கள். எவனைக் கனம் பண்ண வேண்டியதோ அவனைக் கனம் பண்ணுங்கள்,'' என்று இயேசு சொல்கிறார்.எனவே, நாம் செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காகச் செலுத்த வேண்டும். செலுத்தும் வரியால் நாம் பயனடைவதில்லையே! ஊழல் தானே பிரதானமாக இருக்கிறது என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது. அதுபற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், ''உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்திற்கு அரசாங்கத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்,'' என்றும் பைபிள் சொல்கிறது.ஆட்சியில் இருப்பவர் நல்லவரோ, கெட்டவரோ... அது கடவுளின் இஷ்டப்படி நடந்துள்ளது. அவர்கள் தவறு செய்தால், அவர்களை நியாயந் தீர்க்கிற ஒருநாள் இருக்கிறது. அன்று கடவுளின் முன்னால் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, அதுபற்றிய சிந்தனை இல்லாமல், நாம் நமது கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.-பாபு ஜெ.பீட்டர்