உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

** நாக்கில் சனி என்பது ஏன்? இதற்குரிய பரிகாரம் என்ன?ஆர்.நாராயணசாமி, கோவைஜாதகத்தில் லக்னத்தின் இரண்டாம் இடத்தை வாக்கு ஸ்தானம் என்பர். இந்த ராசியில் சனீஸ்வரர் சஞ்சரித்தால் ஒருவருக்கு கடுமையான பேச்சு இருக்கும். அவர்கள் பிறருடன் சண்டை, சச்சரவுக்கு செல்லக்கூடும். இதற்காக சனிக்கிழமை விரதமிருந்து சனீஸ்வரருக்கு எள்தீபம் இடுதல், சனி பிரதோஷத்தன்று சிவதரிசனம் செய்தல், ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரம். * கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?க.காவ்யா, கன்னிவாடிராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், பவானி, விருத்தாசலம், பாபநாசம் போன்ற தலங்களில் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியைத் தரிசிக்கலாம். பொதுவாக எந்த தீர்த்தத்தில் நீராடினாலும், ஏன் வீட்டில் குளித்தாலுமே சரி... அந்த நீரை கங்கையாக கருதி குளித்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம். * நெருக்கடியான நேரத்தில் ஒரு பிள்ளையாருக்கு வேண்டிய நேர்த்திக்கடனை வீட்டுக்கு அருகிலுள்ள வேறு பிள்ளையாருக்கு செலுத்தலாமா?ராஜேஸ்வரி, போரூர்வேண்டுதல் வைத்த கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதே முறை. வெளியூரில் இருந்தாலோ, வேறு ஏதாவது சூழ்நிலையாலோ செலுத்த முடியாவிட்டால், அருகிலுள்ள விநாயகர் கோவிலில் செலுத்தலாம்.* கோவிலுக்கு வேண்டிய நேர்த்தி கடனை, முன்னோர்கள் செலுத்த தவறியிருந்தால் சந்ததிக்கு கஷ்டம் உண்டாகுமா.....அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்பெற்றோர் செய்த பாவ, புண்ணியம் சந்ததியைத் தொடரும். இருந்தாலும், நேர்த்திக்கடன் செலுத்தாமல் போனால் பிள்ளைகளுக்கு கஷ்டம் ஏற்படும் என பயப்படத் தேவையில்லை. வாய்ப்பு இருந்தால் அந்த நேர்த்திக்கடனை செலுத்துங்கள். இதனால், கடவுள், முன்னோர் ஆசியும் கிடைக்கும்.* கோவிலில் விளக்கேற்ற புதியமண் அகல் அவசியமா? இல்லாவிட்டால் பிறர் ஏற்றிய அகலைப் பயன்படுத்தலாமா? எஸ்.ஆர்.கோபால், மதுரை பழைய அகலில் புதிய திரி, எண்ணெய் விட்டு தீபம் ஏற்றலாம். மற்றவர்கள் ஏற்றிய அகலாக இருந்தாலும், அதை சுத்தப்படுத்தியும் விளக்கேற்றலாம். மற்றவர்கள் ஏற்றிய விளக்கு அணைய இருக்கும் நிலையில், அதற்கு எண்ணெய் விட்டு தூண்டி விடுவதும் புண்ணியச் செயலே.* சுபநிகழ்ச்சிகளில் எல்லோரும் சேர்ந்து உண்பதை 'பந்தி வைத்தல்' என்கிறார்களே ஏன்?ஆர்.நிரஞ்சனா, கூடுவாஞ்சேரிபந்தி என்பதற்கு 'உறவு' என்பது பொருள். எல்லாரும் ஒரே இடத்தில் சேர்ந்து உண்ணும் போது ஒருவருக்கொருவர் உறவு பலப்படுகிறது. பெண், மாப்பிள்ளையைப் பெற்ற பெற்றோரை 'சம் பந்தி' என்று குறிப்பிடுவர். இதற்கு 'நல்ல உறவு' என்பது பொருள். சமூக உறவைப் பலப்படுத்தும் நோக்கில் எல்லா சமுதாய மக்களும் சமமாக அமர்ந்து உண்பதை, 'சம பந்தி போஜனம்' என்று குறிப்பிடுவர். கோவிலுக்குச் செல்ல இயலாததால், வீட்டில் இருந்தே வழிபடுகிறேன். எனக்கு கடவுளின் அருள் கிடைக்குமா?ஜெ.ராஜேஸ்வரி, திருவள்ளூர்வயோதிகம், சூழ்நிலை காரணமாக கோவிலுக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் போகலாம். தினமும் நீராடியதும், வீட்டில் விளக்கேற்றி, விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம், சிவ புராணம், அபிராமி அந்தாதி, விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகிய துதிகளைப் படித்து வாருங்கள். கடவுளின் பூரண அருளுக்குப் பாத்திரமாவீர்கள்.