உள்ளூர் செய்திகள்

பழம் எனக்கே...

எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். கடவுளிடம் எல்லா உயிர்களும் அடங்கி உள்ளன. இந்த தத்துவத்தை நமக்கு விநாயகரும், முருகப்பெருமானும் செய்து காட்டியுள்ளனர். நமக்கு தெரிந்த கதைதான். என்றாலும் அக்கதையை படித்து அதில் உள்ள தத்துவத்தை உணர்ந்து கொள்வோம். கயிலாய மலையில் பார்வதியுடன் சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்போது விநாயகரும், முருகப்பெருமானும் தாய் தந்தையரான பார்வதி, சிவபெருமானை வலம் வந்து வணங்கினர். இவர்களைப்போல் பழங்காலத்தில் குழந்தைகள் தினமும் பெற்றோரை வழிபட்டனர். இதை பதினெண்கீழ்க்கணக்கு நுாலான ஆசாரக்கோவை கூறுகிறது. 'வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும்நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்தந்தையும் தாயும் தொழுது எழுக என்பதே முந்தையோர் கண்ட முறை'சரி. விஷயத்திற்கு வருவோம். சிவபெருமானின் கையில் நாரதர் கொடுத்த ஞானப்பழமான மாம்பழம் இருந்தது. இதைப் பார்த்ததும் குட்டீஸ்களான விநாயகரும், முருகனும் 'பழம் எனக்கே' என பிடிவாதம் செய்தனர். உடனே சிவபெருமான், 'உலகத்தை வலம் வருபவருக்கே பழத்தைக் கொடுப்பேன்' என்றார். அவ்வளவுதான். சுட்டியான முருகன் மயில் ஏறி உலகத்தை வலம் வரச் சென்றார். ஆனால் விநாயகரோ, 'எல்லம் சிவத்துக்குள் ஒடுக்கம்' என்பதை அறிந்து சிவபார்வதியை வலம் வந்து பழத்தை பெற்றுக் கொண்டார். இதில் பல சந்தேகங்கள் வரக் கூடும். 1. தந்தைக்கு உபதேசம் செய்த முருகனுக்கு 'சிவத்துக்குள் எல்லாம் ஒடுக்கம்' என்பது தெரியாதா...2. விநாயகரால் உலகத்தை வலம் வர முடியாதா என்ன?3. பழத்தை இருவருக்கும் பங்கிட்டு தரக் கூடாதா? அல்லது மற்றொரு பழத்தை கொடுத்திருக்கலாமே...4. 'தம்பிக்கு கொடுங்கள். எனக்கு வேண்டாம்' என விட்டுக் கொடுக்கும் மனம் விநாயகரிடம் இல்லையா...5. 'அண்ணனுக்கு கொடுங்கள். வயதில் மூத்தவர் அவர்தானே' என முருகன் தியாகம் செய்திருக்கலாமே...6. பழத்திற்காக முருகன் உலகையே வலம் வர வேண்டுமா? 7. ஞானமே வடிவான விநாயகருக்கும், முருகனுக்கும் பழத்தின் மீது அவ்வளவு ஆசையா?இத்தனை கேள்விகளுக்கும் விடை ஒன்று தான். சிவத்துக்குள் அனைத்தையும் பார்த்தார் விநாயகர். எல்லாவற்றுக்குள்ளும் சிவத்தை பார்த்தார் முருகன். இதை உணர்த்தவே இப்படி ஒரு திருவிளையாடல். இதில் என்ன சிறப்பு என்றால்... புத்தி சாதுர்யமான விநாயகர் பெற்றோரை வணங்கி பழத்தை பெற்றார். முருகனும் உலகை வலம் வந்து ஞானம் என்னும் பழத்தை பெற்றார்.