உள்ளூர் செய்திகள்

கண்ணாடியை பார்த்தாயா...

திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் ரமண மகரிஷியைக் காண வேத விற்பன்னர் பலர் வருவர். மோட்சம் பெறும் வழிமுறைகள் பற்றி பேசினர். இந்த விஷயங்களை ரமணருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் பக்தர், 'நமக்கும் இதுபோல் வேதம் தெரிந்தால் மகரிஷியிடம் பேசலாமே. மோட்சம் பெறும் வழி தெரியாமல் போனதே' என கவலைப்பட்டார். அவரது உள்ளக் குறிப்பை அறியாமல் இருப்பாரா மகரிஷி. மறுநாள் வழக்கம் போல் அந்த பக்தர் பணிவிடை செய்த போது, ''இன்று முகச் சவரம் செய்தாயா'' எனக் கேட்டார். எதற்காக சுவாமி இப்படி கேட்கிறார் என எண்ணியபடியே, ''ஆமாம்'' என்றார். ''கண்ணாடியைப் பார்த்துத் தானே சவரம் செய்தாய்'' என மீண்டும் கேட்டார். ஏதோ தவறு செய்து விட்டோமோ, சுவாமி இப்படி அடுக்கடுக்காக கேட்கிறாரே'' என பயந்தார் பக்தர். சிறிது நேரம் கழித்து தயக்கமுடன், ''ஆமாம். சுவாமி'' என்றார். ''கண்ணாடியைப் பார்த்துத் தான் சவரம் செய்தாய். அதாவது நீ சவரம் செய்யும்வரை அந்தக் கண்ணாடி தேவைப்பட்டது. முகத்தை அழகாக்க அது உதவியது. கண்ணாடியில் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே சவரம் செய்து விடுமா'' எனக் கேட்டார் ரமணர். ''முடியாது சுவாமி'' என்றார் பக்தர். ''அதைப் போலவே வேதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், மோட்சம் அடைய மட்டுமே அவை உதவும். அவ்வளவு தான். அவற்றால் உனக்கு மோட்சத்தை வாங்கித் தர முடியாது. மனத்துாய்மை, வழிபாடு மட்டுமே மோட்சப் பாதைக்கு அழைத்துச் செல்லும். கடவுளின் அருள் இருந்தால் அது கிடைக்கும்'' என்றார். வேதமும், சாஸ்திரமும் உயர்வானவை. அதைக் கற்க ஞானம் தேவைதான். ரமண மகரிஷி கூறியபடி வேதத்தில் சொல்லிய அறிவுரைகளை நாம் பின்பற்றலாம் அல்லவா. அதாவது கடவுளை வணங்குவது, உயிர்கள் மீது அன்பு செலுத்துவது. இதை செய்வதில் என்ன சிரமம்... நிச்சயம் ஒரே பிறவியிலேயே மோட்சம் சாத்தியமாகி விடும்.