ஏழுமலையான் மகிமை
சந்திர வம்சத்தைச் சேர்ந்த மன்னன் தர்மகுப்தன் ஒருநாள் வேட்டைக்கு சென்றான். வழி தவறிச் சென்ற அவன், தன்னுடன் வந்த வீரர்களை விட்டுப் பிரிந்தான். சூரியன் மறைந்ததால் எங்கும் இருள் சூழ்ந்தது. இரவைக் கழிக்க ஒரு ஆலமரத்தின் மீதேறி அமர்ந்தான். அப்போது அங்கு சிங்கம் ஒன்று கரடியை விரட்டி வந்தது. அந்த கரடி மரத்தின் மீதேறியது. அதைக் கண்ட மன்னன் பயத்தில் நடுங்கினான். “மன்னா! என்னைக் கண்டு பயப்படாதே. இரவு முழுவதும் நானும் உன்னுடன் மரத்தில் இருக்கிறேன். விடிந்ததும் கீழே நிற்கும் சிங்கத்திடம் இருந்து இருவருமே தப்பித்து விடலாம்” என கரடி தைரியம் சொன்னது. அரை மனதாக மன்னன் சம்மதித்தான். மீண்டும் அவனிடம் கரடி,“மன்னா! நள்ளிரவு வரை, நீ என் மடி மீது தலை வைத்துப் படுத்துக் கொள். அதன் பின், நானும் உறங்குகிறேன். அதன்பின், கீழே நிற்கும் சிங்கம் ஏமாற்றத்துடன் குகைக்குத் திரும்பி விடும். காலையில் இருவரும் மரத்தை விட்டு கீழே இறங்கலாம்” என்றது கரடி.கரடி விழித்திருக்க, மன்னன் அதன் மடியில் தலை வைத்துப் படுத்தான். சிங்கம் நயவஞ்சகத்துடன், “கரடியே! மன்னனைக் கீழே தள்ளி விட்டால், பசியால் வாடும் நான் உணவாக்கிக் கொள்வேன். உனக்கும் என்னால் ஆபத்து நேராது” என்றது. கரடி அதற்கு சம்மதிக்கவில்லை. நள்ளிரவில் மன்னன் கண்விழித்ததும், கரடி துாங்க ஆரம்பித்தது. இப்போதும் சிங்கம் தன் முயற்சியைக் கைவிடவில்லை.“மன்னா! நான் சொல்வதைக் கேள். கரடியைக் கீழே தள்ளி விட்டால் போதும். நான் பசியாறுவேன். அதன் பின், நீயும் பயமின்றி கீழே இறங்கலாம்” என்றது சிங்கம். மன்னன் அதற்கு சம்மதித்து, கரடியைத் தள்ளி விட முயற்சித்தான். கண் விழித்த கரடி சுதாரித்துக் கொண்டது. கைகளால் இறுக்கமாக மரக்கிளையைப் பற்றி நின்றது. கோபத்தில் கரடி மன்னனை நோக்கி, “வாக்கை காப்பாற்றாத பாவியாகி விட்டாய்! நீ இந்த காட்டில் பைத்தியமாகத் திரிவாய்” என சபித்தது. அதன் பின் கீழே இறங்கிய கரடி முனிவராக மாறி நின்றது. “ சிங்கமே! என் பெயர் தியானகஸ்தர். தவசக்தியால் நினைத்த வடிவெடுக்கும் சக்தி எனக்கு உண்டு. என்னைப் போய் உணவாக்க முயற்சிக்கிறாயே. கவுதம முனிவரின் சாபத்தால், குபேரபுரி யட்சனான நீயும் காட்டில் சிங்கமாக திரிகிறாய். சுயவடிவம் பெறுவாய்” எனச் சொல்ல சிங்கமும் யட்சனாக மாறினான். தியானகஸ்தரும், யட்சனும் அங்கிருந்து மறைந்தனர். பொழுது விடிந்தது. அங்கு வந்த வீரர்கள், தர்மகுப்தன் பைத்தியமாக மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். காட்டில் தவம் செய்யும் ஜெய்மினி முனிவரின் உதவியை நாடினர். அவர் வீரர்களிடம், “திருப்பதி மலைக்குச் சென்று சுவாமி புஷ்கரணியில் நீராடி, ஏழுமலையானைத் தரிசிக்க துன்பம் தீரும்” என்றார். தர்ம குப்தனும் புனித தீர்த்தத்தில் நீராடி சுயஉணர்வைப் பெற்றான். நன்றியுடன் ஏழுமலையானுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினான்.