உள்ளூர் செய்திகள்

பகீரதன் தவம்

தசரத சக்கரவர்த்திக்கு முன்பு அயோத்தியை ஆண்ட மன்னர்களில் ஒருவர் சகரன். ஒருசமயம் இவர் அஸ்வமேத யாகம் நடத்தினார். அதில் பங்கேற்ற குதிரை சம்பிரதாயப்படி பூமியைச் சுற்றி வருவதற்காக அனுப்பப்பட்டது. இதை அறிந்த இந்திரனின் மனம் கலங்கியது. யாகம் வெற்றி பெற்றால் தன் பதவிக்கு ஆபத்து உண்டாகுமே என குதிரையை கடத்தினான். சகரனின் அறுபதாயிரம் மகன்களும் குதிரையைத் தேடி அலைந்தனர். எங்கும் காணாமல் ஏமாற்றமடைந்த அவர்கள், பாதாள உலகிற்கு செல்ல எண்ணி பூமியைத் தோண்ட ஆரம்பித்தனர். பாதாள உலகில் கபில முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரருகே யாக குதிரை மேய்ந்தபடி நின்றது. யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் தான் இந்திரன், பாதாள உலகில் குதிரையை விட்டிருந்தான். ஆனால் சகரர்களோ குதிரையைத் திருடியவர் கபில முனிவர் எனக் கருதி தாக்க முயன்றனர். கண் விழித்த முனிவர் அனல் பறக்கும் கண்களால் ஆவேசமாக பார்த்தார். அவ்வளவுதான். அனைவரும் எரிந்து சாம்பலாயினர். விஷயமறிந்த சகரன் தன் பேரனான அம்சுமானை அனுப்பி முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். அதன்பின் குதிரையை மீட்டு வர யாகம் நிறைவேறியது. சாம்பலான சகரர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமே! இதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. சிவனை நோக்கி அம்சுமானின் பேரனான பகீரதன் தவம் செய்தார். அதன் பலனாக வானுலகில் ஓடிய கங்கை பூமிக்கு வந்தது. அதில் சாம்பல் கரைக்கப்படவே சகரர்கள் நற்கதி அடைந்தனர்.