இதயத்தில் வாழ்பவர்
நவ.23, 2025 - பகவான் சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள்பகவான் சத்ய சாய்பாபா நவ.23, 1926ல் பிறந்தார். இவர் பிறந்த ஊர் ஆந்திராவிலுள்ள புட்டபர்த்தி. ஒரு காலத்தில் இந்த ஊரை 'கொல்லப்பள்ளி' என அழைத்தனர். இதற்கு 'பசுக்கள் நிறைந்த ஊர்' என பொருள். ஒருநாள் பசு ஒன்று பாம்புப்புற்றில் பால் சொரிந்தது. அதன் உரிமையாளர் புற்றில் இருந்த பாம்பைக் கொன்றார். அதன்பின் ஊர் எங்கும் பாம்பு புற்றுகள் தோன்றின. இதனால் கொல்லப்பள்ளி என்பது 'புட்ட வர்த்தினி' என்றானது. இதற்கு 'புற்று நிறைந்த இடம்' என பொருள். காலப்போக்கில் இது 'புட்டபர்த்தி' ஆனது. இங்கு வசித்த வெங்கப்பராஜு, ஈஸ்வரம்மா தம்பதியின் மகனாக பிறந்தார். பகவான் கிருஷ்ணர் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தது போல ஈஸ்வரம்மாவுக்கு எட்டாவது குழந்தையாக அட்சய வருடம் கார்த்திகை சோமவாரம் (திங்கள்கிழமை) திருவாதிரை அன்று பகவான் சத்ய சாய்பாபா அவதரித்தார். இது சிவனுக்கு உகந்த நாள். அவரது இடது கன்னம், மார்பில் மச்சங்கள் இருந்தன. பாதங்களில் மகாவிஷ்ணுவின் சங்கு, சக்கர ரேகைகள் ஓடின. குழந்தைக்கு சத்யநாராயணன் எனப் பெயரிட்டனர். அவரது தாத்தா கொண்டமராஜு அவரை பூஜை அறையிலேயே எப்போதும் இருக்கச் செய்தார். அங்கு வசித்த கிராம அதிகாரியின் மனைவி சுப்பம்மா, தெய்வக் குழந்தையான அவரை தன் குழந்தையாக கருதி அன்பு காட்டினார். கிருஷ்ணரை வளர்த்த யசோதை போல விளங்கினார். யாராவது பசி எனச் சொன்னால் அவர் உணவு கொடுப்பார். குளிரால் வாடுவோருக்கு ஆடைகள் தருவார். கால்நடைகளை இம்சை செய்தால் அவரது மனம் படாத பாடுபடும். புட்டபர்த்தியில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், பின்னர் புக்கபட்டணத்திற்குச் சென்றார். சிறுவயதிலேயே பள்ளிக்கூட நண்பர்கள் விரும்பும் பொருட்களை தன் ஆற்றலால் வரவழைத்துக் கொடுத்தார். அவரது தாயார் கல்வி, குடிநீர், மருத்துவ வசதியின்றி தவிக்கும் மக்களுக்காக இரக்கப்படுவார். அவர்களுக்கு இந்த அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என மகனுக்கு அறிவுரை வழங்குவார். பின்னாளில் தாயாரின் விருப்பத்திற்கேற்ப கல்வி, மருத்துவமனை, குடிநீர் உள்ளிட்ட சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.ஏப்.24, 2011ல் ஸித்தி அடைந்தாலும் அனைவரின் இதயங்களிலும் இன்றும் வாழ்கிறார்.