குருநாதரும் கடவுளும் ஒன்று
ஆந்திராவிலுள்ள தெனாலியைச் சேர்ந்த தம்பதிகள் சூரிபாபு, சீதம்மா. இவர்கள் அடிக்கடி திருவண்ணாமலைக்கு சென்று ரமண மகரிஷியைத் தரிசிப்பர். இதற்கிடையில் ஒருமுறை காஞ்சி மஹாபெரியவர் ஆந்திராவிலுள்ள நெல்லுாருக்கு யாத்திரையாக வந்தார். அவரை தரிசிக்க வந்த போது, தங்களின் வீட்டிற்கு சுவாமிகள் வந்தருள வேண்டும் என பலமுறை கேட்டனர். ''இதற்கு என்னிடம் பதில் இல்லை'' என்றார் மஹாபெரியவர். ''எல்லாம் கடவுள் செயல். அவரது விருப்பத்தை யாரால் அறிய முடியும்? விருப்பு வெறுப்பு அற்றதாக மனதை வைத்திருக்க வேண்டும்'' என விளக்கம் அளித்தார். மூன்று வாரங்கள் கடந்தன. திடீரென ஒருநாள் அதிகாலையில் சீதம்மாவின் வீட்டிற்கு மஹாபெரியவர் வந்தார். திக்குமுக்காடி போனார் சீதம்மா. பாதபூஜை செய்ய விரும்பிய சீதம்மாவிடம், தன் பாதுகைகளைக் கொடுத்து பூஜை செய்ய உத்தரவிட்டார். இதே போல மற்றொரு நிகழ்வாக ஒருநாள் சீதம்மா கனவு கண்டார். அதில் ரமணர் நிற்பது போலவும், அவரது முகம் எங்கும் அம்மை கொப்பளம் இருப்பது போலவும் இருந்தது. அதற்கான பலன் என்ன என்பதை அறிய விரும்பினார். அந்த சமயத்தில் செம்மங்குடி என்னுமிடத்தில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அங்கு சென்ற போது அம்மை, காய்ச்சலால் மஹாபெரியவர் அவதிப்படுவதைக் கேள்விப்பட்டனர். இதன் மூலம் 'ஞானிகள் இருவரும் ஒருவரே' என்னும் உண்மையை உணர்ந்தார். கனவு பற்றி தெரிவித்தபோது மஹாபெரியவர் புன்னகைத்தார். ஒருமுறை கணவருடன் சீதம்மா காஞ்சிபுரம் மடத்தில் தங்கியிருந்தார். அங்கு சூரிபாபுவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆதிசங்கரர் படம் ஒன்றை அவரிடம் மஹாபெரியவர் கொடுத்து அதை ஏந்தியபடி பின்புறமாக நடந்து செல்லுமாறு கட்டளையிட்டார். சிறிது துாரம் நடந்து விட்டு வந்தார். காய்ச்சல் விலகியது. ஞானிகளின் வழிகாட்டுதலை ஏற்று நடந்தால் நமக்குத் தான் நன்மை என்பதற்கு இந்நிகழ்ச்சி உதாரணம். ஒருமுறை சிவன் கோயிலுக்கு தம்பதிகள் சென்றனர். அங்கிருந்த சிலை ஒன்றை நந்திகேஸ்வரர் எனக் கருதி நுாறு தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொண்டனர். இது குறித்து சொன்ன போது அந்த கோயிலில் நந்திகேஸ்வரர் சன்னதி இல்லை என்றும், வேறொரு கோயில் ஒன்றைக் குறிப்பிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அங்கு சன்னதி திறக்கும் என்றும் மஹாபெரியவர் தெரிவித்தார். நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாதோ என அவர்கள் வருந்திய போது, ''கவலை வேண்டாம். நுாறு தேங்காய்களை என் முன்னர் உடையுங்கள். நேர்த்திக்கடன் நிறைவேறி விடும்'' என்றார். குருநாதரும் கடவுளும் ஒன்று என்பதை உணர்ந்து தேங்காய்களை உடைத்தனர். அந்த குருநாதரின் அருட்பார்வை கிடைக்க நாமும் பிரார்த்திப்போம். எல்லாம் கடவுள் செயல். அவரது விருப்பத்தை யாரால் அறிய முடியும்? விருப்பு வெறுப்பு அற்றதாக மனதை வைத்திருக்க வேண்டும். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்*தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்எஸ்.கணேச சர்மாganesasarma57@gmail.com