உள்ளூர் செய்திகள்

மகாபாரதமாந்தர்கள்-24

கடோத்கஜனாகிய நான்...நா ன் தோற்றத்தில் பிரம்மாண்டமானவன். மிகவும் வலிமையானவன். வாயு தேவனின் அம்சமான பீம தேவருக்கும், வனத்தில் கோலோச்சி வந்த இடும்பிக்கும் பிறந்த நான் வேறு எப்படி இருப்பேனாம்?என் தலை பானை போல இருந்ததாம். பானையை கடம் என்றும் கூறுவார்கள். என் தலையில் பிறப்பிலிருந்தே ரோமங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. உத்கசா என்றால் ரோமங்கள் இல்லாத என்று பொருள். ஆக என் தலையின் காரணமாக என் பெயர் கடோத்கஜன் என்று ஆனது.கவுரவர்களின் சதி திட்டத்தால் தீ வைக்கப்பட்ட அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர்கள் தப்பி வனம் வந்தபோது, அங்கு வசித்து வந்த என் மாமன் இடும்பன் பீமனுடன் போரிட்டு இறக்க, என் தாய் இடும்பி மனம் ஒப்பி பீமனைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்தவன் நான்.பின்னர் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பிவிட என் அன்னையும் நானும் வனத்திலே தங்கி விட்டோம். வனத்திலிருந்து கிளம்பும்போது என் பாட்டி குந்தி தேவி நான் எப்போதும் பாண்டவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார். நானும் உறுதிமொழி அளித்தேன்.என் தொடர்பான சிறுவயது சம்பவம் ஒன்று உண்டு. அரக்கர்களுக்கு மாயசக்தி உண்டு. இடும்பியின் மகனான எனக்கும் அந்த சக்தி இருந்தது. சிறுவயதில் எல்லாவற்றிற்கும் என் மாய சக்தியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு முறை கிருஷ்ணர் எனக்கு முக்கியமான ஒரு உபதேசத்தைச் செய்தார். 'அற்ப விஷயங்களுக்கெல்லாம் உன் மாய சக்தியைப் பயன்படுத்தாதே. அதற்கான காலம் போர்க்களத்தில் வரும்' என்றார்.காட்டுப் பகுதியில் மன்னனாக ஆட்சி செய்தேன். நாககன்னி அகிலாவதியை மணந்தேன். மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்கள் பார்பாரிகன், அஞ்சனபர்வன்,மேக வண்ணன். என் சித்தப்பா அர்ஜுனன். அவரது மகன் அபிமன்யு இறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் ஜெயத்ரதன். இதன் காரணமாக அதற்கடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் தான் ஜெயத்ரதனைக் கொல்லப் போவதாகவும், அப்படிக் கொல்ல முடியாவிட்டால் தீயில் இறங்கி இறந்து விடுவதாகவும் அர்ஜுனன் சபதம் செய்தார். எனவே துரியோதனன் ஜெயத்ரதனை அடுத்த நாள் போரில் ஈடுபடச் செய்யாமல் மறைத்து வைத்தார். சூரியன் மறையும் நேரம் நெருங்கியும் அவனைப் பாண்டவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது கிருஷ்ணர் தனது சக்கரத்தால் சூரியனை தற்காலிகமாக மறைக்க, அர்ஜுனன் இறப்பதை கண்ணால் காண வேண்டுமென்ற எண்ணத்தில் ஜெயத்ரதன் வெளிப்பட்டான். கிருஷ்ணர் சக்கரத்தை விலக்கிக் கொள்ள சூரியன் மறைய இன்னும் சிறிது நேரம் இருக்கிறது என்பது தெரிய வந்தது. அர்ஜுனன் ெஜயத்ரதனை கொன்றார். பிறகு சூரியன் அன்று அஸ்தமித்தான்.யுத்த தர்மத்தின்படி சூரியன் மறைந்த பிறகு அன்று போரை நிறுத்தி விடவேண்டும். ஆனால் ஜெயத்ரதன் இறந்ததால் வெறிகொண்ட கவுரவர்கள் அன்று சூரியன் மறைந்த பிறகும் போரில் ஈடுபட்டார்கள். முட்டாள்கள். இருள் வேளையில்தான் எனக்கு மிக அதிக சக்தி என்பதை அறியாதவர்கள். அன்று கவுரவ சேனைக்கு பெரும் சேதத்தை விளைவித்தேன்.எனக்கு உதவ என்னுடன் ஒரு ராட்சதக் கூட்டமே வந்தது. என் மகன் அஞ்சனபர்வனும் வீரமாகப் போரிட்டான். துரோணரின் மகன் அஸ்வத்தாமனும் என் மகனும் மிக ஆக்ரோஷமாக யுத்தத்தில் இறங்கினார்கள். என் மகன் ஒரு குறுவாளை அஸ்வத்தாமனை நோக்கி வீசினான். அதை அஸ்வத்தாமன் பொடிப்பொடி ஆக்கினான். கோபமடைந்த என் மகன் ஒரு கதையை அவனை நோக்கி வீசினான். அதையும் இரண்டு துண்டுகளாக்கினான் அசுவத்தாமன். என் மகன் மாயா சக்தியைப் பயன்படுத்தி மேலெழும்பி அஸ்வத்தாமன் மீது பல மரங்களை எறிந்தான். அஸ்வத்தாமன் பெரும் சினத்துடன் தொடர்ந்து அம்புகளை வீசி என் மகனைக் கொன்றான். மகனை இழந்தவுடன் பெரும் சோகமும் கடும் கோபமும் கொண்டேன். மேலும் ஆக்ரோஷமாக போரிடத் தொடங்கினேன். கர்ணனை என் உடல் வலிமை, மாயா சக்தி, ஆயுதங்கள் ஆகிய அனைத்து கோணங்களிலும் தாக்கத் தொடங்கினேன். அவனும் எனக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தான். முன்பொருமுறை என் தந்தை பீமனால் கொல்லப்பட்டவன் பகாசுரன். அவனது தம்பியான அலயுதன் என்பவன் துரியோதனனை நாடி பீமனைக் கொல்ல தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டான். பின்னர் என் தந்தை பீமனுடன் அவன் போரிட்டான். அவனும் ஒரு அரக்கன் என்பதால் அவனிடமும் மாயா சக்தி இருந்தது. இதன்மூலம் என் தந்தை அமர்ந்திருந்த தேரைப் பொடியாக்கினான். என் தந்தைக்கு உதவ கர்ணனைத் தாக்குவதை நிறுத்திக்கொண்டு, தந்தையின் புறமாகச் சென்றேன். நானும் அந்த அரக்கனும் போரிட்டோம். அது ஒரு சமமான போராகவே இருந்தது. ஒரு கட்டத்தில் நான் அவனை துாக்கி தரையில் அடித்துக் கொன்றேன். அவன் தலையைக் கொய்தேன். அந்த தலையுடன் துரியோதனனை அடைந்து 'மன்னனை பார்க்கும்போது வெறும் கையோடு வரக்கூடாது என்பார்கள். அதனால் தான்...' என்றபடி அந்த தலையை துரியோதனனுக்கு அளித்தேன். பல விதங்களில் முயற்சித்தும் கர்ணனால் என்னைக் கொல்ல முடியவில்லை. தன் படை முழுவதையுமே நான் அழித்து விடுவேனோ என்று அஞ்சிய துரியோதனன் கர்ணனிடம் மீண்டும் மீண்டும் எப்படியாவது என்னை அழிக்கச் சொன்னான்.கர்ணனிடம் சக்தி ஆயுதம் என்ற தெய்வீக அஸ்திரம் இருந்தது. அதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். போரில் அர்ஜுனனை அழிப்பதற்காக அதைப் பாதுகாத்து வைத்திருந்தான் கர்ணன். என்றாலும் துரியோதனனின் தொடர் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் கர்ணன் என்னை நோக்கி சக்தி ஆயுதத்தை எய்தான். அது என் உயிரைப் பறித்தது. என் உடல் கீழே விழும்போது மாய சக்தியால் என் உடலைப் பல மடங்கு அதிகரித்துக் கொண்டு விழுந்தேன். கவுரவ சேனையைச் சேர்ந்த பல வீரர்கள் என் உடலின் கீழ் அகப்பட்டு நசுங்கி இறந்தனர். ஆக என் தந்தையின் தரப்புக்கு நான் பேருதவியாக இருந்தேன் என்பதுடன் என் சித்தப்பா அர்ஜுனனுக்கு எதிரான ஒரு முக்கிய ஆயுதத்தை எனக்கெதிராக எய்த வைத்து அவரது உயிர் இழப்பை தவிர்க்கக் காரணியாகவும் இருந்தேன் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.-தொடரும்இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் உள்ள ஹடிம்பா கோயிலில் இருந்து சில மீட்டர் தொலைவிலேயே அமைந்திருக்கிறது அவரது மகனான கடோத்கஜன் மரக்கோயில். மரத்தால் அமைந்த கோயில் அல்ல. ஒரு மரம், அதன் கீழே கடோத்கஜனின் சிலை, அவ்வளவுதான். திறந்தவெளி கோயில். விலங்குகளின் கொம்புகள் மற்றும் எலும்புகள் அந்த மரத்தில் தொங்க விடப்பட்டுள்ளன. அங்கே ஆடு மாடுகள் பலி ஏற்கப்படுவது சகஜம்.இமாச்சல பிரதேசத்தில் உள்ள பலரும் கடோத்கஜனை தெய்வமாக வணங்குகிறார்கள். கடோத்கஜன் என்றாலே அவரது பிரம்மாண்டமான உருவம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அவரது சிலை மிகச் சிறிதாகக் காட்சியளிக்கிறது.மரத்தைச் சுற்றி சலவைக்கல்லில் ஒரு பெரிய மேடை காணப்படுகிறது வருபவர்கள் கடோத்கஜனை வணங்கி விட்டு அந்த மரத்தை வலம் வருகிறார்கள். அருகில் தொங்கிக்கொண்டிருக்கும் மணியை அடிக்கிறார்கள். பூஜாரி கூட ஸ்வெட்டர், ஷால் ஆகியவற்றை அணிந்து கொண்டுதான் வருகிறார். இமாச்சலப் பிரதேசத்தின் குளிர் அப்படி.ஜி.எஸ்.எஸ்.