நன்றியின் சிகரம்!
1927ம் ஆண்டு முதல் நாய் ஒன்று காஞ்சிப் பெரியவரின் கருணைக்குப் பாத்திரமாக இருந்தது. அந்த நாய் மடத்தின் பரிவார ஊர்வலம் செல்லும் போதெல்லாம் கூடவே செல்லும். இரவில் மடத்தைக் காவல் காக்கும். மடத்தில் கொடுக்கும் உணவு தவிர வேறு எதையும் சாப்பிடாது. பெரியவர் அடிக்கடி நாய்க்கு உணவு தரப்பட்டதா என்று விசாரிப்பது வழக்கம். அவர் பல்லக்கில் வெளியூர் செல்லும் போது நாயும் புறப்பட்டு விடும். பக்தர்கள் தரிசிக்க பல்லக்கு நிறுத்தப்பட்டால், தொலைவில் போய் நின்று கொள்ளும். மடத்து யானையின் கால்களுக்கு நடுவிலும் நடந்து செல்லும். ஒருநாள் சிறுவன் ஒருவன் நாயைக் கல்லால் அடித்து துன்புறுத்த, அது அவனைக் கடிக்கப் பாய்ந்தது. எனவே மடத்து ஊழியர்கள் அதன் கண்களைத் துணியால் கட்டி, 37 கி.மீ., தொலைவிலுள்ள கிராமத்தில் விட்டு வந்தனர். ஆனால் நாய் ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன் மடத்தில் வந்து நின்றது. நன்றியின் சிகரமாகத் திகழ்ந்த அந்த நாய் அதன் பின் தன் இறுதி வரையில் பெரியவரைப் பார்க்காமல் சாப்பிட்டதில்லை. குருஷேத்திர போர் முடிந்து தர்மர் 36 ஆண்டு ஆட்சி செய்தார். பின் பூலோக வாழ்வை முடிந்து சொர்க்கத்தை நோக்கிச் சென்ற போது, தர்மதேவதை நாய் வடிவில் அவரைப் பின்தொடர்ந்து சென்றது இங்கு நினைவுகூரத்தக்கது.கணபதி அருணாசலம்