ரம்மோ... ஜம்மோ
ரொம்ப வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது. ரொம்ப பவ்யமாக நிற்கும் அந்த பதினாறு வயது இளைஞன் நானே தான். அவர் எனக்கு வேலை கொடுப்பாரா, மாட்டாரா என்று தெரியவில்லை. மிகவும் மரியாதையாக, .'சார்...கல்கத்தாவுக்கு நான் புதிது. எனக்கு வேலை வேண்டும் சார்'. ஆவலுடன் அவர் பதிலை எதிர்பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன்......''சரி...சரி....போயி அங்கே உக்கார்ந்து கொள்....!லீலா...இந்த பையனுக்கு அப்பாயின்ட்மென்ட் லட்டர் அடித்துக்கொண்டு வா.... மாத சம்பளம் நூறு ரூபா.''எனக்கோ ஒரே சந்தோஷம், ஆச்சர்யம். என்னால் நம்பவே முடியவில்லை. கேட்ட உடனே வேலையை கொடுத்து விட்டார். நான் யார் என்ன என்று கூட கேட்கவில்லையே. அந்த ஹிம்சந்த்பாய் ஷா ஒரு மனிதரா அல்லது கடவுளா?சரி, லீலாவிடமே கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு என் இடத்துக்கு நான் சென்றேன். ''என்ன வேலை கிடைத்துவிட்டதே என்று ஆச்சரியமாக இருக்கிறதா? காலேஜ் எல்லாம் போயி படிக்காதவர் அவர். தன்னுடைய தலையிலே அலுமினியப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் விற்று, அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெள்ளைக்காரனோட தொழிற்சாலையை வாங்கி, இன்று பேலூர்லே ஒரு தொழிற்சாலை, சென்னையிலே ஒரு தொழிற்சாலை உருவாக்கி, கலர் கலரா அலுமினியப் பாத்திரங்களை உற்பத்தி செய்து எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்திருக்கார் என்று உனக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை,'' என்று லீலா சொன்னாள்.''மனிதர்களை பார்த்த உடன் எடை போட்டு விடுவார்...... அதுனாலே தான் உனக்கு உடனே வேலை கிடைத்து விட்டது. நன்றாக வேலை பார்த்தால், நீ கேட்கவே வேண்டாம். உனக்கு வரவேண்டியதெல்லாம் வந்து சேரும்'', என்று சொல்லி முடித்தாள். அப்படி ஒரு பிள்ளையார் சுழியோட நான் கோல்கட்டாவில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். எல்லாம் நன்றாகவே போய் கொண்டிருந்தது....ஒரு நாள், ''பெரியவரைப்போயி பாரு,'' என்று லீலா சொன்னவுடன் நான் ரொம்ப பயந்து போய் விட்டேன். ஏதோ தவறு ஆகி விட்டது. சீட்டை கிழிக்கப்போறார்னு நினைத்துக் கொண்டு பலி ஆடாட்டமா, ''கூப்பிட்டீங்களா சார்னு...'' உள்ளே போனேன்.''அஞ்சு மணிக்கு ஆபீஸ் முடிந்தவுடன் நீ எங்கே போகிறாய்?'', என்று அவர் கண்ணாடியை தூக்கிவிட்டு, என்னை நேரே பார்த்து கேட்டார்.'ஏதோ நம்மைப் பற்றி ரிப்போர்ட் கேள்வி பட்டிருக்கார் போல இருக்கு. யோசித்து பதில் சொல்ல வேண்டும்' என்று நினைத்துக்கொண்டு, ''ரைட்டர்ஸ் பில்டிங்கில் இருந்து, நேரே 2இ எக்ஸ்பிரஸ் பஸ் பிடித்து கோல் பார்க் போவேன் சார்.....பி.காம்.,க்கு படிக்கலாம்னு உத்தேசம். இப்போ பி.யு.சி., சாயந்திர காலேஜ்லே படிக்கிறேன்,'' என்று பயந்துகொண்டே, நிதானமாகச் சொன்னேன்.''அது கேள்விப்பட்டு, அது விஷயமாக பேசறதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன்,''.''ஆமாம், காலேஜ் பீஸ் எவ்வளவு?''''மாதம் ஒன்பது ரூபா சார்....''''உனக்கு இந்த மாதத்திலேந்து இருபது ரூபா சம்பள உயர்வு தர்றேன். ஆனா.. ஒரு விஷயம்... நீ வேலை பாரு. இல்லை பாடம் படி... இரண்டையும் ஒன்றாகச் செய்வது சரி இல்லே! ஏனென்றால், நீ எது செய்தாலும் அதுலே நூறு சதவீதம் கவனம் கொடுக்க வேண்டியது அத்தியாவசியம்,'' என்றார்.மறக்க முடியாத வேத வாக்கு.... .....வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இதைத்தானே வலியுறுத்துகிறார்...***அதே கம்பனிலே சின்ன வேலைலே இருந்தவர்தான் சம்பக்பாய் என்றழைக்கப்பட்ட சம்பக்லால் ஷா. தொப்பி அணிந்து, குஜராத்தி ஸ்டைல் பஞ்சகச்சம் கட்டிண்டு தான் அலுவலத்துக்கு வருவார். சாக்ஸ் இல்லாத ஷூ அணிந்திருப்பார். ஏதாவது கடிதம் ஆங்கிலத்தில் எழுதவேண்டி இருந்தால், 'நீதான் எழுதி தரணும்னு' என்று என்னிடம் வருவார்....'உனக்கு ஒரே ஒரே வாழ்வு தான்... மகிழ்ச்சியுடன் வாழு....மன நிம்மதியுடன் வாழு' என்று திருப்பி திருப்பிச் சொல்வார். எப்பவும் அவரிடமிருந்து ஜோக் மழைதான் வரும். அதுனாலே, சம்பக்பாய் எங்களோட பேவரிட்.ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார்..... அவருக்கு பகவான் கொடுத்ததோ, வரிசையாக எட்டு பெண் குழந்தைகள். கோவிலுக்கு போவார், பையன் பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்.... 'நாலு அஞ்சு பெண் பிறந்தாலே அரசனும் ஆண்டி ஆயிடுவான்னு தமிழ்லே சொல்லுவார்களே, நீங்கள் எப்படி மேனேஜ் பண்ணுவேள்னு நான் கேட்டதற்கு, அவர், ''உங்க தமிழ்லே எதுவேண்டுமானாலும் சொல்லட்டும். எனக்கு பகவான் எட்டு மகாலட்சுமிகளை கொடுத்திருக்கான். அவன் இருக்கும் பொழுது, எனக்கு என்ன கவலை? நீ சின்ன பையன். உனக்கு இதெல்லாம் புரியாது. எனக்கு கட்டாயம் ஒரு பையன் பிறப்பான்'' என்று ஆணித்தரமான நம்பிக்கையோடு சம்பக்பாய் சொல்வார்.***''நாராயண். நீ இந்தியாவை விட்டுட்டு போகிறாய் என்று கேள்விப்பட்டேன். டம் டம் ஏர்போர்ட் போகும் வழியிலே, கட்டாயம் நம்ப வீட்டுக்கு நீ வந்துவிட்டுத் தான் போகவேண்டும். உனக்கு ஸ்பெஷல் குஜராத்தி பேடா வைத்திருக்கிறேன். சம்பக்பாய் சொன்னதை கேட்டு, எதுக்காக பேடா குடுக்கிறார். ஒருவேளை போனஸ் விஷயம் அவருக்கு தெரிந்து விட்டதோ,'' என்று நினைத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு சென்றேன். என்னாலே நம்பவே முடியவில்லை. தொட்டிலில் ஒரு குழந்தை. ஆம்பிளைப் பையன். பகவான் மேலே பரிபூர்ண நம்பிக்கை வைத்திருந்த அந்த சம்பக்லால் ஷா நீட்டிய பேடா பாக்ஸ்லேர்ந்து,. ஒண்ணு இல்லை, மூணு பேடாக்கள் எடுத்து நான் சந்தோஷமாக சாப்பிட்டேன்.....''ஆமாம்....உனக்கு மிச்சாமி துக்கடம் பிரேயர் தெரியுமோ. .உனக்காக நானே எழுதி வெச்சிருக்கிறேன் பாரு. .ஊருக்கு போகும் பொழுது எடுத்துகொண்டு போ,'' என்று சொல்லிவிட்டு, என்னுடைய ஜேபியில் ஒரு காகிதத்தை நுழைத்தார். ..''நீங்களே படித்து, விளக்கி விடுங்களேன்,'' என்று கேட்டுக்கொண்டேன். சம்பக்பாய் குஜராத்தியில் சொன்னார் :''கமேமி சர்வே ஜீவாசர்வே ஜீவா கமந்து மேமிட்டி மே சர்வ பூயேஷுவெரம் மஜ்ஜாம் ந கேன்விமிச்சாமி துக்கடம்''அதைகேட்டு, நான் ''மிச்சாமி துக்கடம் என்றால், தெரிந்தோ, தெரியாமலோ என்னிடம், எந்த உயிருள்ள பிராணி தவறு செய்திருந்தாலும், நான் மறந்து விடுகிறேன். அதே போல, என்னுடைய தவறுகளை நீங்கள் மறந்து என்னை மன்னித்து விடுங்கள்,'' என்றதுடன், ''நான் சரியாக புரிந்து கொண்டேனா?'' என்று நான் சம்பக்பாயிடம் கேட்டேன்.'நீ சரியாக புரிந்து கொண்டாய். 'பர்யுஷன்' என்றழைக்கப்படும் எட்டு நாள் திருவிழா, முடியும் தருணத்தில் நாங்கள் இந்த பிரார்த்தனையை ஒப்பிப்போம். அதன் பிறகு ஒவ்வொருவரையும் சந்தித்து, 'மிச்சாமி துக்கடம்' என்று சொல்லுவோம். இதனுடைய சாராம்சமே 'மறப்பதும், மன்னிப்பதும் தான்' என்று அவர் விளக்கினார்..விமானத்தில் நான் உட்கார்ந்தேன்.......என்னுடைய மனமெல்லாம், அந்த 'மறப்பது, மன்னிப்பது' மேலேயே இருந்தது...நாம் எல்லாருமே, இதை கடைபிடித்தால், சுவர்க்கம் இங்கேயே இருக்குமே.....அதை தேடி நாம் ஏன் அலைய வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ***வெளி நாட்டுக்கு போன எனக்கு , குஜராத்தி (அன்பாக குஜராத்திகளை நாங்கள் குஜ்ஜு என்று சொல்லுவோம்) நண்பர்கள் நிறைய பேர் கிடைத்தார்கள்.''வேலை முடிந்த பிறகு என்ன பண்ணுவீர்கள்?'' என்று நான் அவர்களிடம் கேட்டேன்......'ரம்மோ...ஜம்மோ' பண்ணுவோம் என்றார்கள்.. 'ரம்மோன்னா' விளையாடுவோம்; 'ஜம்மோன்னா'.. சாப்பிடுவோம் என்று அர்த்தம் என்றார்கள். ''ஆமாம், விடுமுறையிலே இந்தியா போனா என்ன பண்ணுவேள்?'', ஆவலுடன் நான் கேட்டேன்....''ஜஸ்ட் ரிவர்ஸ்..பண்ணிக்கோ............ஜம்மோ .......ரம்மோ பண்ணுவோம்.......சாப்பிடுவோம்...விளையாடுவோம்.''''அப்படியா, மத்த வேலை எல்லாம். என்ன ஆகும்?'' என்று நான் கேட்டதுக்கு, ''வாந்தோ நத்தி.......நோ ப்ராப்ளம். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு, எவருக்கும் கெடுதல் செய்யாமல் அல்லது கெடுதல் நினைக்கக் கூட இல்லாமல் இருந்தால் போதும், மத்ததெல்லாம் அவன் பாத்துக் கொள்வான்,'' என்று அவர்கள் சொன்னதை கேட்டு, பகவான் மேலே அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த சம்பக்பாய் ஞாபகம் உடனே வந்தது.நல்முத்துக்கள் எல்லாரிடமிருந்தும், எல்லா பக்கங்களிருந்தும் இந்த பொங்கல் நன்னாளில் இருந்து ஒலிக்கட்டும்...'மிச்சாமி துக்கடம்...'