பாவம் போக்கிய வேல்
சிவபூஜையின் போது தவறு செய்யும் முனிவர்களை சிறை பிடித்து வந்தது கற்கிமுனி என்னும் பூதம். ஆயிரம் முனிவர்களை சிறை பிடித்து அவர்களை ஒரே நேரத்தில் தின்ன வேண்டும் என்பது அதன் விருப்பம். 999 முனிவர்கள் சிக்கினர். இன்னும் ஒரு முனிவரைப் பிடிக்க அது காத்திருந்தது. இந்த சமயத்தில் புலவர் நக்கீரர் திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவணப் பொய்கையில் நீராடி அங்குள்ள ஆலமரத்தடியில் பூஜை செய்தார். அந்த மரத்தின் இலைகள் நீரில் விழுந்தால் மீனாகவும், நிலத்தில் விழுந்தால் பறவையாகவும் மாறி விடும். நக்கீரர் பூஜை செய்த நேரத்தில் விழுந்த இலை ஒன்று நீரில் பாதியும், தரையில் மீதியுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தது. இதைக் கண்ட நக்கீரர் பூஜையை மறந்து வேடிக்கை பார்த்தார். இது தான் சமயம் என ஆணவத்துடன் பூதம் அவரை சிறையில் அடைத்தது. சிறையில் இருந்த முனிவர்கள், “நக்கீரரே... ஆயிரமாவது நபர் கிடைக்காமல் இருந்ததால் உயிருடன் இருந்தோம். இப்போது உங்களால் நாங்களும் இரையாகப் போகிறோம்” என வருந்தினர். 'திருமுருகாற்றுப்படை' பாடலை நக்கீரர் பாட, அங்கு வந்த முருகப்பெருமான் பூதத்தைக் கொன்றார். பூதம் தீண்டிய பாவம் தீர கங்கையில் நீராட விரும்பினார் நக்கீரர். வேலால் பாறையைக் கீறி கங்கையை வரவழைக்க நீராடி மகிழ்ந்தார் நக்கீரர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பஞ்சாட்சர பாறையில் இந்த கங்கை தீர்த்தம் உள்ளது. இதன் அடிப்படையில் புரட்டாசி கடைசி வெள்ளியன்று முருகப்பெருமானின் வேலுக்கு, மலை மீதுள்ள விஸ்வநாதர் கோயிலில் பூஜை நடக்கிறது.