எந்த வேலையும்... நல்ல வேலை தான்!
UPDATED : பிப் 20, 2018 | ADDED : பிப் 20, 2018
பிப்.21 ஸ்ரீ அன்னை பிறந்த தினம் * கீழான வேலை என எதுவுமில்லை. எப்படி செய்வது என தெரிந்து கொண்டால் எல்லாம் நல்ல வேலை தான்! * நீ எப்படி இருந்தாய் என்பதைப் பற்றி கவலைப்படுவதால் ஏதும் ஆகப்போவதில்லை. எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினை. * கடவுளின் அழைப்பிற்காக காத்திருங்கள். அப்போது தான் அவரது அருளைப் பெற முடியும்.* பயந்தவன் கடவுளிடம் கோபத்தை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் அவரிடம் புன்னகையையும், அன்பையும் காண்கிறான்.* நீங்கள் கேட்டதையெல்லாம் கடவுள் தரமாட்டார். உங்கள் தகுதிப்படியே தான் அவர் அருள்வார். கடவுளின் அருளுக்கு உங்களை பாத்திரமாக்கி கொள்ளுங்கள். * மனம் என்பது 'பாலீஷ்' செய்யப்பட்ட கண்ணாடி. அதை துாய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை.* ஒரு நோயாளிக்கு மருந்தை விட முக்கியமானது தன்னம்பிக்கை.* உன் திறமை எல்லாம் உன்னுடையதே என்று நம்பினால், கடவுளின் ஆதரவு இல்லாமல் போனாலும் அதை இழந்ததாக உணர மாட்டாய்.* வேலை செய்வது பிரார்த்தனையாக இருக்கட்டும். ஏன் என்றால் வேலை ஒன்றே, கடவுளுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கை. * வாழ்வில் எந்த நிலையிலும் நேர்மை தவறாதீர்கள். நேர்மையான மனம் உடையவர்களுக்கு, மகிழ்ச்சி என்னும் பரிசை கடவுள் தருவார்.* பிறரது விஷயத்தில் புதிய மாறுதல் உண்டாக்க விரும்பினால், அந்த மாற்றம் உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கட்டும். எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருங்கள். * ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறை. அதை உயிராக மதிப்பது நம் கடமை. * உண்மை, நேர்மை ஆகிய இரு பண்புகளும் மனத்துாய்மைக்கு அவசியம். மனத் துாய்மையின்றி கடவுளை வழிபட்டு பயனில்லை. * அமைதியுடன் இருக்க பழகி விட்டால், பெரும்பாலான பிரச்னைகளை வாழ்வில் தவிர்த்து விடலாம். எப்போதும் அமைதி காத்து மன வலிமையுடன் இருக்க பழகுங்கள். * நாம் பெற்ற அறிவு, கடவுளிடம் இருந்தே வந்தது. கடவுளின் படைப்புகளில் இருந்து மனித குலம் எல்லா அறிவையும் பெற்று கொண்டது. சொல்கிறார் புதுச்சேரி அன்னை