வெற்றி தரும் வௌ்ளிக் கிழமை தீபம்!
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள நவசக்தி தீபத்தை வெள்ளிக்கிழமை தரிசித்தால் வாழ்வில் என்றென்றும் வெற்றி நிலைக்கும்.தல வரலாறு: அத்திரி மகரிஷி இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில், லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடாக மாறியது. சிவலிங்கம் புற்றுக்குள் மறைந்தது. பொம்மி என்னும் சிற்றரசர் ஆட்சி செய்த போது அவரது கனவில் தோன்றிய சிவன், புற்று மூடிய லிங்கம் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி கோயில் எழுப்ப உத்தரவிட்டார். பொம்மியும் கோயில் கட்டினார். அந்த லிங்கத்திற்கு கீழே தண்ணீர் சுரந்ததால் சுவாமிக்கு 'ஜலகண்டேஸ்வரர்' என பெயர் சூட்டப்பட்டது.பல்லி தோஷ பரிகாரம்: ஜலகண்டேஸ்வரர் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். கருவறையின் பின்புறம் திருப்பதி வெங்கடேசப்பெருமாள் சன்னதி உள்ளது. புரட்டாசி சனியன்று இவருக்கு மகாபிஷேகம் நடக்கும். சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ராகு, கேதுவால் ஏற்படும் நாகதோஷம், பல்லி தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வழிபடுகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது எட்டு சப்பரங்களில் 63 நாயன்மார்கள் வீதியுலா செல்வது கண்கொள்ளா காட்சியாகும். இவர்களுடன் ஜலகண்டேஸ்வரர் யானை வாகனத்தில் பவனி செல்வார். செல்வ விநாயகர், ஆதிசங்கரர் சன்னதிகளும் உள்ளன. வன்னி மரம் தல விருட்சமாகும்.வெற்றி தரும் தீபம்: அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில் 'அணையா நவசக்தி ஜோதி தீபம்'இருக்கிறது. அம்பிகை தீப வடிவில் நவசக்திகளாக அருள்பாலிப்பதாக ஐதீகம். வெள்ளிக்கிழமையில் இந்த விளக்கிற்கு மேள தாளத்துடன் நைவேத்யம் படைத்து பூஜை நடத்தப்படும். இதை தரிசித்தால் வாழ்வில் வெற்றி நிலைக்கும். முன்மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது. பக்தர்கள் இங்குள்ள நந்தியின் முன் தங்கள் பிரார்த்தனை நிறைவேற தீபம் ஏற்றாத அகல்விளக்கு வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை.மும்மூர்த்தி தரிசனம்: பிரம்மா, திருமால் தங்களில் உயர்ந்தவர் யார் என போட்டி நடத்த அவர்களுக்காக சிவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஜோதி வடிவில் காட்சியளித்த நாள் திருக்கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் பவனி வருவர். அன்று மாலை ராஜகோபுரத்தில் தீபமேற்றி மும்மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடக்கும். கார்த்திகை கடைசி சோமவாரத்தன்று (திங்கள்) சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கும்.காசி யாத்திரை பலன்: பிரகாரத்தில் கங்கை நதி கிணறு வடிவில் இருக்கிறது. இதன் அருகில் 'கங்கா பாலாறு ஈஸ்வரர்' சன்னதி உள்ளது. இந்த லிங்கம் இக்கிணற்றில் இருந்து கிடைத்தது. கூம்பு வடிவில் உள்ள இந்த லிங்கத்தின் பின்புறம் பைரவர் வீற்றிருக்கிறார். காசி போலவே சிவன், கங்கை தீர்த்தம், பைரவர் என மூன்றையும் ஒரே இடத்தில் தரிசிப்பது சிறப்பு. இதை வழிபடுவோருக்கு காசியாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி நான்கு சீடர்களுடன் உற்சவராக இருக்கிறார். சனீஸ்வரர் மனைவி ஜேஷ்டாதேவி, மகன் மாந்தியுடன் உற்சவமூர்த்தியாக இங்கிருக்கிறார்.கலையம்ச மண்டபம்: மன்னர் பொம்மி கோயிலைச் சுற்றி பிரமாண்டமான கோட்டை, பெரிய அகழியை உருவாக்கினார். பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் உள்ளது. வெண்ணெய்த் தாழி கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர், நரசிம்மர், கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், யோகாசனம் செய்யும் மகரிஷி, மேல் விதானம் தாங்கும் கிளிகள் என இங்குள்ள சிற்பங்கள் கலையம்சம் நிறைந்ததாக உள்ளன. இதன் அழகில் மயங்கிய ஆங்கிலேயத் தளபதி ஒருவர் தூண்களோடு பெயர்த்து செல்ல திட்டமிட்டார். இதற்காக கப்பலை வரவழைத்த போது அது விபத்தில் சிக்கியதால் எண்ணத்தைக் கைவிட்டார். எப்படி செல்வது: வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:30 மணிதொடர்புக்கு: 98947 45768, 98946 82111, 0416 - 222 3412, 222 1229