தங்கம் தரும் துர்கை
பெண்களுக்கு தங்கம் என்றாலே மிகவும் பிடிக்கும். அதில் பலரும் பெண் குழந்தை பிறந்தவுடன் தங்கநகையை சேர்க்க ஆரம்பித்துவிடுவர். ஆனால் சிலருக்கோ தங்கம் வாங்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த சூழலில் நீங்கள் இருந்தால் வருத்தப்பட வேண்டாம். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு வாருங்கள். கீலா என்ற அசுரன் துர்கையின் அருள் வேண்டி தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்கை வேண்டிய வரத்தை கேள் என்றதற்கு, ''எப்போதும் என் இதயத்திலேயே நீங்கள் இருக்க வேண்டும்'' என சொன்னான். அதற்கு அவள், ''மகனே! நீ கிருஷ்ணா நதிக்கரையில் மலையாக உயர்ந்து நில். அரக்கர்களை அழித்த பின் உன் இதயத்தில் அமர்கிறேன்'' என வாக்கு கொடுத்தாள். அதன்படி கீலா மலையாக மாறினான். பின் மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்யும் சூழல் ஏற்பட்டது. பிறகு அஷ்டகரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி என்ற திருநாமத்துடன் மலை மீது அமர்ந்தாள். கோடான கோடி சூரியன்கள் பிரகாசிப்பதைப் போல், அன்னை துர்கா பொன்னாக ஜொலித்தாள். தங்க மழையும் பொழியச் செய்து இத்தலத்தை செழிப்பாக்கினாள். அன்று முதல் அவளை, 'கனகதுர்கா' என்ற பெயரில் தேவர்கள் பூஜித்தனர். அன்னையை மனதார வணங்கினாலே போதும். அவளது ஆசியால் உங்கள் வீட்டிலும் தங்கம் குவியும். விஜயவாடா ஒரு காலத்தில் மலைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. இவை கிருஷ்ணா நதியின் போக்கை தடுத்தன. இதனால் பல இடங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர். துர்கையிடம் முறையிட, அவள் இந்த மலையைக் குடைந்து நதிக்கு வழிவிடச் செய்தாள். இதனால் இப்பகுதி 'பெஜ்ஜவாடா' எனப் பெயர் பெற்றது. பெஜ்ஜம் என்ற தெலுங்கு வார்த்தையின் பொருள் குகை. பின்பு விஜயவாடா என திரிந்தது. படைப்புக் கடவுளான பிரம்மாவும் இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். சுவாமிக்கு 'மல்லேஸ்வரர்' என்று பெயர். பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் இங்கு தவம் செய்துதான் சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றான். பத்தாம் நுாற்றாண்டில் சாளுக்கிய மன்னரான திரிபுவனன் இக்கோயிலை கட்டினார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. அம்பாள் சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார். மூலஸ்தானத்தில் மேல் தங்க கூரை வேய்ந்துள்ளனர்.எப்படி செல்வது: சென்னையிலிருந்து 450 கி.மீ., விசேஷ நாள்: நவராத்திரி, தசரா மஹா சிவராத்திரி, பிரதோஷம் ஆவணி மாதம் முழுவதும் நேரம்: அதிகாலை 4:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 0866 - 242 3600, 242 5744 அருகிலுள்ள தலம்: விஜயவாடா மங்களகிரி மலை நரசிம்மர் கோயில் 15 கி.மீ., நேரம்: காலை 6:00 - 2:00 மணி; தொடர்புக்கு: 08645 - 232 945, 233 174