உள்ளூர் செய்திகள்

நலம் தரும் நஞ்சுண்டையா

சிவன் பாற்கடலில் எழுந்த விஷத்தைக் குடித்த தலம் நஞ்சன்கூடு. இது கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் உள்ளது. நஞ்சுண்டையா என்னும் பெயர் பெற்ற இவரை வணங்கினால், சகல நலமும் கைகூடும்.தல வரலாறு: மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாகப் பூட்டி, தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற, பாற்கடலைக் கடைந்தனர். வாசுகிப் பாம்பு வலி தாளாமல் நஞ்சு உமிழ்ந்தது. தேவர்கள் செய்வதறியாமல் சிவனைச் சரணடைய, அவர் விஷத்தை உருண்டையாக பிடித்து வாயில் போட்டார். அவரது மனைவி பார்வதி பதறிப் போய், அவரது கழுத்தை பிடிக்க விஷம் தொண்டையில் தங்கியது. விஷம் அருந்தியதால் 'நஞ்சுண்டையா' என்ற பெயர் ஏற்பட்டது. தேவர்களுக்காக நஞ்சுண்ட சிவனை அதே கோலத்தில் தரிசிக்க விரும்பினார் கவுதமரிஷி. இதற்காக பூலோகத்தில் தவமிருந்தார். சிவனும் அவ்வாறே காட்சி தர, கவுதமர் வழிபட்டு மகிழ்ந்தார். சிவன் காட்சி தந்த இத்தலம், 'நஞ்சன் கோடு' என அழைக்கப்பட்டு, நஞ்சன்கூடாக மாறியது. இங்குள்ள அம்பிகையை 'பர்வதாம்பா' என்கின்றனர். குல தெய்வம்: கர்நாடக மக்களின் குலதெய்வமாக நஞ்சுண்டையா விளங்குகிறார். குழந்தைக்கு பெயரிடுதல், முடி காணிக்கை, அங்கப் பிரதட்சணம், துலாபாரம் என நேர்த்திக்கடன்களை செய்கின்றனர். வீட்டில் நடக்கும் சுபவிஷயங்களுக்கு இங்கு முதல் காணிக்கை அளிக்கின்றனர். விஷ பயம், மரண பயம் போக்குபவராக இருக்கும் இவருக்கு சுக்கு,நெய், சர்க்கரை ஆகியவை கலந்த 'சுகண்டித சர்க்கரை' கலவை படைக்கப்படுகிறது.வாசல் நோக்கிய நந்தி: இங்குள்ள கருங்கல் நந்தி, தளவாய் விக்ரமாதித்தன் என்பவர் 1446ல் நிர்மாணித்தார். இது மூலவரை நோக்கி இல்லாமல் வாசலை நோக்கி உள்ளது. எப்போதும் அலங்காரத்தில் இருப்பதால் 'அலங்கார நந்தி' எனப்படுகிறது. நாயன்மார் அறுபத்து மூவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.சிறப்பம்சம்: பிரசன்ன விநாயகர், நர்த்தன முருகன், லிங்கோத்பவர், முருகேஸ்வரர், தீர்த்தேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. இங்கு மரகதலிங்கம் உள்ளது. திருப்பணி செய்த மன்னர் கிருஷ்ணராஜ உடையார் குடும்பத்தினரின் சிலைகள் பிரகாரத்தில் உள்ளன. கோயில் அருகில் கபினி நதியும், குண்டல நதியும் ஓடுகின்றன. தியான நிலையில் உள்ள பெரிய சிவன் சிலை கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் 'தேவதேவன்' என்னும் பெருமாள் சன்னதி உள்ளது.எப்படி செல்வது: மைசூரு - கோயம்புத்துார் சாலையில் 23 கி.மீ.,விசேஷ நாட்கள்: மகாசிவராத்திரி, கார்த்திகை, பங்குனி பிரம்மோற்ஸவம்நேரம்: காலை 6:00- - 1:00 மணி ; மாலை 4:00- - 9:00 மணிதொடர்புக்கு: 08221- - 226 245, 225 445, 227 239அருகிலுள்ள தலம்: மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்