குன்னுார்;குன்னுார் நகராட்சியில் கோழி, மீன் உட்பட உணவு கழிவுகளை உரமாக்கும் முயற்சியில் 2 ஆண்டுகளில், 1,200 டன் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் ஓட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டு 'கிளீன்' குன்னுார் அமைப்பு மூலம் தரம் பிரிக்கப்படுகிறது.இதில், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழி, மீன் உட்பட இதர உணவு கழிவுகளை உரமாக்கும் திட்டம், 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. மட்கும் குப்பைகள் உரமாக்குவது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இருந்த போதும் முதன்முறையாக கொண்டுவந்த இத்திட்டம் வெற்றி பெற்றது.கோழி, மீன் கழிவுகள், நார்கழிவுகளை குறிப்பிட்ட வெப்பநிலையில், 'பல்வரைசர்' எனும் இயந்திரத்தில் அரைத்து உரமாக மாற்றும் திட்டம், வெற்றி பெற்றது பிறகு, 'விண்ட் ரோ கம்போசிங்' முறையில், காற்று, வெளிச்சம் உள்ள இடத்தில் பதப்படுத்தப்படுகிறது. இவை 30 நாட்களில், இங்குள்ள குளிரான காலநிலையிலும் உரமாக தயாராகிறது. கோவையில் ஆய்வகத்துக்கு மாதிரி அனுப்பியதில் சிறந்த உரம் என தெரிவிக்கப்பட்டது. 1985ம் ஆண்டின் மத்திய அரசின் 'பெர்டிலைசர் கன்ட்ரோல் ஆர்டரின்' மதிப்பீட்டில் இந்த உரம் முதல் கிரேடு பெற்றது.கடந்த 2 ஆண்டுகளில் குப்பை குழிக்கு வந்த 5,600 டன் உணவு கழிவுகளில், 1,200 டன் வரை உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, கிளீன் குன்னூர் அமைப்பு தலைவர் சமந்தா அயனா கூறுகையில்,''இத்திட்டத்தில் நகராட்சியின் ஒத்துழைப்புடன் பணிகள் நடந்து வருகிறது. மகளிர் உட்பட, 30 பேரின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. நார் மற்றும் உணவு கழிவுகளுடன், இறைச்சி மீன் கழிவுகள், 10 சதவீதம் சேர்த்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. விவசாய தோட்டங்கள், மலர் சாகுபடிக்கு உரமாக பயன்படுத்த விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். இயற்கை சார்ந்த விவசாயத்துக்கு பயனுள்ளதாக உள்ளது,'' என்றார்.