மா.கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: வெள்ள நிவாரண
நிதி ஒதுக்குவதில், தமிழகத்தின் மீது கொண்டுள்ள வஞ்சக போக்கை மத்திய அரசு
கைவிட்டு, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக அரசு கோரியுள்ள, 21,000 கோடி ரூபாய்
நிதியை உடனே வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாளை
சென்னையில் சாஸ்திரி பவன் முன் நடக்கும் முற்றுகை போராட்டத்துக்கு அனைத்து
தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.ரைட்டு... மத்திய அரசு கொடுக்க போற கொஞ்சம், நஞ்ச பணத்தையும் தராம கெடுத்து விடுறதுக்கு தோழர்கள் வழி தேடுறது தெளிவா தெரியுது! பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: மின் வாரியத்தில் களப் பணியாளர்கள், மின் கணக்கீட்டாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு நிரந்தரமாக நியமிக்காமல், தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.இதென்ன புதுசா... எல்லா துறையிலும் ஒப்பந்த பணியாளர்களை நியமிச்சு தானே அரசு வண்டியை ஓட்டிட்டு இருக்கு!தமிழக காங்., துணை தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் பேட்டி: ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினை, ராமதாஸ் சந்தித்து பேசினார். வன்னியர் சமுதாயத்திற்கு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் கோரிக்கை பின்னணியாக சந்திப்பு இருந்திருக்க வேண்டும். வன்னிய சமுதாய மக்களுக்கு ராமதாஸ், 'என் கால்கள் என்றும், பார்லிமென்ட், சட்டசபை இருக்கும் கோட்டை நோக்கி ஒரு போதும் செல்லாது' என்று சத்தியங்கள் செய்துள்ளார். தற்போது, சத்தியங்கள் காற்றில் பறந்து விட்டன போலும்.அவர் போகாம, மகனை தான் மூணு முறை அனுப்பினார்... காரியம் நடக்கலையே... அதான், அவரே போயிட்டார்!தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: இலங்கையில் தோட்ட வேலைக்கு சென்ற மலையக மக்களின், 200 ஆண்டு கால வரலாற்று சுவடுகளை எடுத்துக்காட்டும் வகையிலும், அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், நினைவு தபால் தலையை, அண்ணாமலை ஏற்பாட்டில், டில்லியில் ஜே.பி.நட்டா வெளியிட்டதற்காக இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல, உலக தமிழர்களும் பிரதமர் மோடியை போற்றி வரவேற்கின்றனர்.அவங்க வரவேற்பாங்க... ஆனா, இங்குள்ள உலக தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் சிலர் தான் புகைச்சலுக்கு ஆளாகி இருப்பாங்க!