இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் அறிக்கை:
தேனி மேகமலை புலிகள் காப்பக பகுதியில், பல தலைமுறைகளாக வசித்து வரும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை, 'புலிகள் பாதுகாப்பு' என்ற பெயரில் ஒரேயடியாக வெளியேற்றும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு, ஆழ்ந்த கவலைக்குரியது. பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை, 'ஆக்கிரமிப்பாளர்கள்' என முத்திரை குத்தி வெளியேற்றக் கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் வாழ இடமா இல்லை... காட்டுக்குள் வாழ்ந்தால், வன விலங்குகள் தாக்கும்; அவற்றின் வாழ்வாதாரங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால், பல மனித உயிர்கள் காப்பாற்றப்படுமே! காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் பேச்சு:
நம் கட்சியின் அமைச்சர்கள், கவனமாக செயல்பட வேண்டும். அமைச்சர்கள் தவறு செய்தால், அது கட்சியை பாதிக்கும். இந்திய அளவிலான ஒரு சுற்றறிக்கையை அப்படியே, 'காப்பி பேஸ்ட்' செய்து, நம் அமைச்சர் வகிக்கும் துறையில் இருந்து சுற்றறிக்கை வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது; இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். உங்க கட்சியைச் சேர்ந்த, உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனை தான், நீங்க பெயர் குறிப்பிடாம தாக்குறீங்க என்பது நல்லாவே தெரியுது! தமிழக மின் நுகர்வோர் சங்கத்தின் தலைவரும், சமூக ஆர்வலரு மான ரா.சீனிவாசன் பேட்டி:
மின் வாரிய அதிகாரிகளுக்கு, வாரியம் சார்பில் வழங்கப்பட்டுள்ள மொபைல் போனில் தொடர்பு கொண்டால், 'இந்த எண்ணுக்கு 'இன்கமிங்' சேவை துண்டிக்கப்பட்டுள்ளது' என்ற தகவல் மட்டும் ஒலிக்கிறது. மின்சார கருவிகளில் பழுது ஏற்பட்டாலோ, மின் ஒயர்கள் அறுந்து விழுந்தாலோ தகவல் தெரிவிக்க, மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதற்கு காரணம், மொபைல் போன் கட்டணங்களை மின் வாரியம் செலுத்தவில்லை; உடனே கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் தான், மின் வாரியத்தின் நிதி நிலைமை இருக்கா? காங்., கட்சியின் மீனவர் பிரிவு தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அறிக்கை:
வாழ்வாதாரத்திற்காக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனுக்கு சென்று, அங்கு சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் ஐந்து பேரின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை தாயகம் அழைத்து வர, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து, ஐந்து மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும். நம் மீனவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையை, மத்திய அரசு கண்டிப்பாக எடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!