சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசிக்கும், பழம்பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி:இப்போதெல்லாம், யாராவது என்னிடம் வயதை கேட்டால் நான் பிறந்த ஆண்டான, 1938 என்று கூறாமல், 38 என்று மட்டும் கூறுவேன். புரிந்து கொள்ளாமல் விழிப்பர்.என் பூர்வீகம் கும்ப கோணம். கும்பகோணத்தில் நிறைய நாடக சபாக்கள் இருந்தன. என் தந்தை, வேலை பார்த்தபடியே பொழுது போக்காக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த எனக்கும் மேடை நாடகங்களின் மீது ஈடுபாடு வந்தது. சென்னையில் விவேகானந்தா கல்லுாரியில் படித்தபோது, தமிழ் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு, சாம்பு என்.எஸ்.நடராஜன் வாயிலாக கிடைத்தது.தேவன் எழுதிய, 'கோமதியின் காதலன்' நாடகத்தின் மூலம், 1953ல் மேடையேறினேன். விவேகானந்தா கல்லுாரியில் படித்துவிட்டு வெளியே வந்ததால், 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' என்ற பேனரில், பகீரதன் எழுதிய, 'தேன்மொழியாள்' என்ற நாடகத்தை அரங்கேற்றினோம். அதில் நடித்த சோவின் அறிமுகம் கிடைத்தது.அவர் எங்களுக்காக, 'என்னிடம் கிடைத்தால்' என்ற நாடகத்தை எழுதி கொடுத்தார். அதில், ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர், உதவி ஆசிரியர், கார்ட்டூன் ஆர்டிஸ்ட் ஆகப் பணிபுரியும் 'இடும்பன், ஆட்டம் பாம், காத்தாடி' என, மூன்று கதாபாத்திரங்கள்...அதில், 'காத்தாடி' பாத்திரத்தை நான் ஏற்றேன். அது வித்தியாசமான நகைச்சுவை நாடகமாக அமைந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த நாடகத்துக்குப் பின், என் பெயரில் 'காத்தாடி' ஒட்டிக் கொண்டது. சுந்தரேச ராமமூர்த்தியான நான், காத்தாடி ராமமூர்த்தியானேன். கடந்த 1966ல், 'ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்' என்ற நாடக கம்பெனியை துவங்கினேன். இன்று வரை நாடகங்கள் போட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக என் நாடகக் குழு இயங்கி வருவதை பெருமையாக நினைக்கிறேன். என் சக நடிகர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தான் அதற்கு காரணம்.தற்போது, 85 வயதாகிறது. இந்த வயதிலும் அவசரமாக எங்கேயாவது போக வேண்டும் என்றால் என் இருசக்கர வாகனத்திலேயே போய் விடுவேன். ரசிகர்களின் ஆதரவும், கைதட்டலும், ஆரவாரமும் தான் என்னை இன்றும் இளமையாக வைத்திருக்கின்றன. காலையில், 20 நிமிடங்கள் நடப்பதை தவிர வேறு எந்தப் பயிற்சியும் இல்லை.எதிர்காலம் நம் கையில் இல்லை. உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அந்த பாதையில் செல்லுங்கள்.'அவன் நல்லாயிருக்கானே' என்று நினைக்காதீர்கள். நன்றாக இருப்பவர்களை எடுத்துக்காட்டாக நினைத்தபடி, நீங்கள் நன்றாக இருக்க வேண்டிய முயற்சிகளில் தொடர்ந்து பயணப்பட்டபடியே இருங்கள்.யாருக்கும் ஆலோசனை சொல்லாதீர்கள்; விளக்கு எரிவதற்கான துாண்டுதலாக மட்டும் நாம் இருந்தால் போதும். 10 ஏக்கர் தோட்டத்தில் ரூ.8 லட்சம் லாபம்!
இயற்கை விவசாயம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக, மத்திய அரசின் பத்மஸ்ரீ
விருது பெற்றுள்ள, அந்தமான் நிக்கோபார் தீவில் வசிக்கும், விவசாயி
செல்லம்மாள் காமாட்சி:நான் ஆறாம் வகுப்பு வரைக்கும் தான்
படிச்சிருக்கேன். இப்போது எனக்கு, 69 வயதாகிறது. மத்திய அரசு வழங்கக்கூடிய
மிக உயரிய விருதான, பத்மஸ்ரீ எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு
முதன்மை காரணம், இயற்கை விவசாயம்.பூர்வீகம், கரூர் மாவட்டத்தில்
உள்ள தாளப்பட்டி கிராமம். எனக்கு 3 வயசு இருக்கும்போதே, பெற்றோர்
அந்தமானுக்கு வந்துட்டாங்க. விவசாய கூலி வேலைக்கு போய் தான் குடும்பத்தை
காப்பாத்தினாங்க. 1969ல் திருமணம் ஆனது. என் கணவர் காமாட்சி,
அந்தமானில் தான் இருந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது
வசிக்கும் ரங்கசாங்க் பகுதியில், அவருக்கு 10 ஏக்கர் நிலம் இருந்துச்சு.
எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். கணவரோடு சேர்ந்து, நானும் விவசாய
வேலைகளில் கவனம் செலுத்த துவங்கினேன்.இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத அந்த காலகட்டத்திலேயே நாங்கள், ரசாயன பயன்பாட்டை தவிர்க்க துவங்கி விட்டோம்.இப்போது,
என் தோட்டத்தில், 750 தென்னை மரங்கள் இருக்கு. அதோடு ஊடுபயிராக, 3,000
பாக்கு மரங்கள், 2,500 வாசனை பட்டை மரங்கள், 200 மூங்கில் மரங்கள், 100
சப்போட்டா மரங்கள், 50 பிரியாணி இலை மரங்கள், 10 ஜாதிக்காய் மரங்களும்
இருக்கு.இவை தவிர மிளகு, அன்னாசி, வாழை, மஞ்சள், நெல்லியும்
இருக்கு. இந்தப் பகுதியில் உள்ள நிலங்கள் அதிக மேடு, பள்ளங்கள் கொண்டதாக
இருக்கும்; சரிவும் அதிகமாக இருக்கும். இதனால் மழைக்காலத்தில் மண் அரிப்பு
ஏற்படும். அதை தடுக்க, நாட்டு மூங்கில் மரங்கள் வளர்க்க துவங்கினேன்.வேளாண்
அறிவியல் நிலைய விஞ்ஞானி எல்.பி.சிங் கூறியபடி, ஊடுபயிராக மிளகு பயிர்
செய்ய துவங்கினேன்; அருமையான வருமானம் கிடைத்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக,
இயற்கை விவசாயத்தில் வெற்றிநடை போடுவதோடு நீர் மேலாண்மை, ஊடுபயிர்கள்
சாகுபடி, இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து, மற்ற விவசாயிகளிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால்,
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.இந்த 10 ஏக்கர்
தோட்டம் வாயிலாக, ஆண்டுக்கு, 11 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில்
எல்லா செலவுகளும் போக, 8 லட்சம் ரூபாய் லாபமாக கையில் மிஞ்சும்.எனக்கு
பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு என்னோட குடும்பம், உறவினர்கள், நண்பர்கள்
மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மற்ற இயற்கை விவசாயிகளும் சந்தோஷப்படுறாங்க.
மனதார வாழ்த்துறாங்க.தொடர்புக்கு: 99332 38788