நகை முத்திரை
நகை, நாணயம் என, எந்த வடிவத்தில் தங்கத்தை வாங்கினாலும் மகிழ்ச்சி பொங்கும். வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகளைப் பார்ப்போம்!தங்கத்தின் தரம், 'காரட்' மூலம் அளவிடப்படுகிறது. இது, தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளக்க உதவும் அலகு. காரட், அரபி மொழி சொல். மத்திய கிழக்கை தாயகமாக கொண்ட, காரோப் என்ற மரத்திலிருந்து பிறந்தது. இந்த மர விதை, 200 மி.கி., எடையுள்ளதாக கருதப்பட்டது. இது மாறாதது என நம்பியதால் தான், தங்கத்தின் மதிப்பளவாக கொள்ளப்பட்டது. சுத்த தங்கம், 24 காரட் மதிப்பு கொண்டது. குறிப்பிட்ட அளவில் தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகங்களை, சேர்க்கும்போது தான், ஆபரணம் உருவாக்கும் வகையில் நெகிழ்கிறது தங்கம். உலோகங்களின் சேர்க்கைக்கு ஏற்ப, 22, 18, 14 என, காரட் மதிப்பிடப்படுகிறது.தமிழகத்தில், 22 காரட் மதிப்பில் தங்க நகைகள் விற்கப்படுகின்றன. பிற நாடுகளில், 14,18 காரட் மதிப்பில் கிடைக்கிறது. காரட் மதிப்பளவுக்கு ஏற்ப விலையும் வித்தியாசப்படும்.தங்க ஆபரணம் வாங்கும் போது, செய்கூலியில் கவனமாக இருக்க வேண்டும். கையால் செய்த ஆபரணங்களுக்கு, செய்கூலி அதிகம். இயந்திர வடிவமைப்பு என்றால், செய்கூலி குறைவு. இதை மனதில் கொள்ளவும்.பழைய நகையை மாற்றவும் வசதி உண்டு. இதில் நகையின் வடிவம் தான் மாறும்; தங்கத்தின் மதிப்பு மாறாது. இந்திய தரக்கட்டுப்பாடு ஆணையம், தங்க ஆபரண தரத்துக்கு, 'ஹால்மார்க்' என்ற தர முத்திரையை வழங்கியுள்ளது. இந்த முத்திரை பதித்த நகை வாங்குவது நம்பிக்கையானது. இது, சர்வதேச அளவில் செல்லுபடியாகும். இவற்றை மனதில் கொண்டு, தங்க நகை வாங்கினால் மகிழ்ச்சி நிலைக்கும்!
வைர இந்தியா!
உலகில், 18ம் நுாற்றாண்டு இறுதி வரை, வைர உற்பத்தியில் முன்னிலை வகித்தது நம் நாடுதான்! ஆந்திர மாநிலம், கோல்கொண்டா பகுதி வைரச்சுரங்கங்களில் மிகச்சிறந்த வைரங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில், புகழ்பெற்ற கோகினுார் வைரமும் ஒன்று. அது, 13ம் நுாற்றாண்டில் எடுக்கப்பட்ட போது, 500 கிராம் எடை இருந்தது.கோகினுார் என்றால் மலையளவு வெளிச்சம் என்று பொருள். இந்த பெயரைச் சூட்டியவர், நாதிர்ஷா; மேற்காசியா பகுதியில் இருந்து இந்தியா மீது படை எடுத்தவர். அப்போது டில்லியை ஆண்ட முகலாய மன்னரிடம் இருந்து, கோகினுார் வைரத்தைக் கைப்பற்றினார்.அதன்பின், பல கைகளுக்கு மாறி, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை அடைந்தது. தற்போது, அந்நாட்டு அரச கிரீடத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. கோகினுார் வைரம், பெண்களுக்கு அதிர்ஷ்டமானது. அதை அணியும் பெண், உலகை ஆள்வார் என்று, ஒரு நம்பிக்கை நிலவுகிறது.-
என்றென்றும் அன்புடன், அங்குராசு.